இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட தற்கொலைதாரியின் எச்சங்கள் நாளை அகழ்ந்து எடுக்கப்படும்! மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து பொது மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தியவரின் எச்சங்கள் நாளை அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது.
நீதிமன்ற உத்தரவிற்கமைய, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் மேவாலயத்தில், காத்தான்குடியை சேர்ந்த முகமது நாசர் முகமது ஆசாத் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியிருந்தார்.
இந்தநிலையில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் எச்சங்களை புதைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள எச்சங்களை, பொருத்தமான இடத்தில் புதைக்கும்படி நீதிமன்ற உத்தரவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் எச்சங்களை புதைக்கும் முடிவை பொலிசார் எடுத்திருந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. வீதி மறியல் போராட்டமும் இடம்பெற்றது. இந்த போராட்டங்களை மக்கள் நடத்தியிருந்தமை குறிப்பிடத் தக்கது.
இது தொடர்பில் இடம்பெற்ற நீதிமன்ற விசாரணையில் சமூக அமைதியின்மையை தடுக்கவும், இந்த சம்பவத்தை வைத்து மேற்கொள்ளப்படும் சமூக சீர்குழைவை தடுப்பதற்கும் உடன் உடற் பாகங்களை தோண்டி எடுத்து பொறுத்தமான இடத்தில் புதைப்பதற்கு அவசர கட்டளை பிறப்பிக்குமாறு அரச சட்டவாதி சக்கரவர்த்தி யாதவன் முன்வைத்த விண்ணப்பத்தை அடுத்தே குறித்த உடற்பாகங்களை தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைக்க அரச அதிபருக்கு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்தே நாளை எச்சங்கள் மீண்டும் தோண்டியெடுக்கப்படவுள்ளது.