பொதுவாக நாம் குடிக்கும் தண்ணீர் மாசு அடைந்திருக்கிறது என்று பிரசாரம் செய்யப்படுவதை கண்டிருக்கலாம். அதனால் தண்ணீர் குறித்த பயம் தோன்றக்கூடும். இதனால் பெரும்பாலும், பாட்டிலில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டரைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம். வெறும் வெள்ளைத் துணியில் தண்ணீரை வடிகட்டுவதுதான் 25 வருடங்களுக்கு முன்பு இருந்த மிகஎளிய சுத்திகரிப்பு முறை. இன்றைய சூழலில் நோய்களில் இருந்து தப்பிக்க தண்ணீரைக் காய்ச்சி குடிக்க வேண்டியது மிக அவசியம். வெந்நீரைக் குடித்தாலே செரிமானத் தொந்தரவுகள், உடல் வலி போன்றவை நீங்கிவிடும். எப்போதும் குளிர்ச்சியாக தண்ணீர் பருக ஆசைப்படுபவர்கள் மண்பானையில் தண்ணீரை சேமித்து வைத்துப் பருகலாம். குளிர்ச்சி தருவதோடு, நீரை இயற்கையாகச் சுத்திகரிக்கும் திறனும் மண்பானைக்கு உண்டு.
செம்பு குடத்தில் இரண்டு முதல் ஐந்து மணி நேரம் தண்ணீரை ஊற்றி வைப்பது மூலமாகத் தண்ணீரில் உள்ள மாசுகளை அகற்றி, நுண்கிருமிகளை அழித்து தண்ணீரை சுத்தப்படுத்தலாம். நீரைக் கொதிக்கவைத்த பின்னர் நெல்லிக்கனிகளையும், சீரகத்தையும் சிறிதளவு சேர்த்து, ஊறவைத்துப் பருகலாம். தண்ணீரைக் காய்ச்சும் போதே சீரகத்தை போட்டும் கொதிக்க வைக்கலாம்.
நெல்லி ஊறிய நீர், உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கும். சீரகத்தில் உள்ள நுண் சத்துகள் நோய் போக்கும் தன்மையை அதிகரிக்கும். தேற்றான் கொட்டைகளை நீரில் போட்டு வைக்கலாம். தேற்றான் கொட்டை ஊறிய நீரால், மாசுகள் அகன்று தூய நீராக மாறும். சமையலுக்கு உபயோகிக்கக்கூடிய தண்ணீரிலோ, குடிக்கும் தண்ணீரிலோ தேற்றான் கொட்டையைப் பொடியாக்கிப் போடலாம். தண்ணீரில் இருக்கக்கூடிய நுண் கிருமி மற்றும் பாக்டீரியாக்களை, பாத்திரத்தின் அடியில் படிய வைத்துவிடும். கேன்வாட்டரிலும் தேற்றான் கொட்டையை பயன்படுத்தலாம்.