புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமாருக்கும், மற்றொரு நபருக்கும் இன்றையதினம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் பிறிதொரு வழக்கிற்காக தூக்குத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
புங்குடுதீவுப் பகுதியில் சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரை கொலை செய்தமைக்காகவே இருவருக்கும் இன்று யாழ். மேல் நீதிமன்றம் தூக்குத்தண்டனை வழங்கியுள்ளது.
குறித்த வழக்கு இன்றையதினம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குற்றவாளிகள் இருவரும் இணைந்து சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரின் உடமையில் இருந்து 10 ஆயிரம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்டமைக்காக 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்த மேல்நீதிமன்றம், இருவரும் 10 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்தவும் அதனைச் செலுத்தத் தவறின் 10 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் உத்தரவிட்டது.
சம்பவத்தையடுத்து புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் செர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார், செல்வராசா கிருபாகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் எதிராக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் சுருக்க முறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2011ஆம் ஆண்டு சந்தேக நபர்கள் இருவருக்கும் பிணை வழங்கப்பட்டது.
சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 2018ஆம் ஆண்டு டிசம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரை கொலை செய்தமைக்காக தண்டனைச் சட்டக்கோவை 296ஆம் பிரிவின் கீழ் முதலாவது குற்றச்சாட்டும் சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரின் உடமையிலிருந்து 10 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்தமைக்காக தண்டனைச் சட்டக்கோவை 380ஆம் பிரிவின் கீழ் இரண்டாவது குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் தொடர் விளக்கமாக கடந்த ஜூலை மாதம் இடம்பெற்றது. வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கை நெறிப்படுத்தினார். முதலாவது சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி பி.அபிதனும் இரண்டாவது சந்தேகநபர சார்பில் விஸ்வலிங்கம் திருக்குமரனும் முன்னிலையாகினர்.