இவ்வாண்டு டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு.
இவ்வாண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதிவரை நாடளாவிய ரீதியில் 58374 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 74 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முழுவதும் மொத்தம் 58 டெங்கு இறப்புகளும் 51,659 நோயாளர்களும் இனங்காணப்பட்டிருந்தனர்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய 5 மாவட்டங்கள் டெங்கு ஆபத்துள்ளவையாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அடையாளப்படுத்தியுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் மொத்தம் 12,252 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான 9,549 நோயாளிகள் கம்பாஹா மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளன.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகளாக 9,459 பேர் பதிவாகியுள்ளனர்.
பொதுமக்கள் அனைத்து வகையான நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களிலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அவற்றை தொடர்ந்து அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
"நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை சுத்தம் செய்ய வாரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
virakesary

