மருவிவரும் நாட்டுப்புற வைத்தியத் தொண்டு.
அம்பாறை மாவட்டத்தில் கல்வியிலும் விவசாயத்திலும் முன்னேறிவரும் பிரதேசம்தான் நாவிதன்வெளி பிரதேசம். யுத்தத்தின் கோரப்பிடியில் பல்வேறு சேதங்களை தனது மார்பில் வாங்கிக் கொண்டாலும் தற்போது அபிவிருத்தியில் முன்னேற்றம் கண்டுவரும் இப்பிரதேசம் நாட்டுப்புற வைத்தியத்திலும் சளைத்ததல்ல. அத்துறையில் பிரசித்தி பெற்றவர்களில் ஒருவர்தான் படத்தில் காணப்படும் இத்ரீஸ் அங்கிள்.!
இதனை எழுதுவதற்கான பிரதான காரணம்
01.ஒரு மனிதன் வாழும் போதே அவனை வாழ்த்தி விடவேண்டும்.
02. அவனிடத்தில் உள்ள கலைகளை நல்ல நோக்கத்திற்காக அழிய விடாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே.
இவரது அரசு தொழிலுக்கு மேலதிகமாக ஒரு சமூக சேவையாக தன்னை நம்பி வருவோர்க்கு வைத்திய சேவையை வழங்குவதில் இவர் வல்லவர். தனது பிரதேசத்தில் காணப்படும் மூலிகைகளை கொண்டும் நாட்டுப்புற வைத்திய துறையில் தான் பெற்ற அறிவைக் கொண்டும் விஷத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் உடலில் ஏற்படும் ஆறாத காயங்கள் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு தீர்வை இலகுவாகவும், இலவசமாகவும் வழங்குவதில் இவரை மிகைத்த வர்கள் இப்பிரதேசத்தில் யாருமில்லைதான் என்று கூற வேண்டும்.!
ஐந்து ரூபாய் மருத்துவரை திரைப்படத்தில் பாராட்டும் நாம் இலவசமாக தன்னை நம்பி வருவோர்க்கு மத பேதம் பாராமல் தனது சேவையை ஆற்றிக்கொண்டிருக்கும் இவரைப் போன்றோரை பாராமலே விட்டு விடுகின்றோம். இவரைப் போன்ற ஒருவரே நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட #வீரத்திடல் கிராமத்தில் வாழ்ந்து மரணித்து போனார். அவரோடு அந்தக் கலையும் அப்பகுதியில் மரணித்துப் போனது கவலையே.!
நான் அறிந்த வகையில் எனது சிறு பிராயத்திலேயே இத்ரீஸ் அங்கிள் தனது மனைவியை இழந்தது மட்டுமல்லாமல் விசேட தேவையுடைய ஒரு பிள்ளையுடன் தனது மூத்த மகனை பொறியியல் துறையிலும் தனது கடைசி மகளை மருத்துவத் துறையிலும் ஆளாக்கியதுடன் குடும்பத்தில் ஏற்பட்ட பல்வேறுபட்ட சவால்களுக்கு மத்தியில் தனது பிள்ளைகளை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தது மட்டுமல்ல தனது வாழ்க்கையையும் இச் சேவைக்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நினைக்கும்போது உண்மையில் உள்ளம் பூரிப்படைகின்றது.!
மறுபுறத்தில் இவரோடு இவரது மருத்து அறிவும் எமது பிரதேசத்தை விட்டு செல்லப் போகின்றது என்பதை நினைக்கும்போது கவலையளிக்கின்றது. இறைவன் இவரது ஆயுளை எமது சமூகத்திற்காக நீட்டி தரவேண்டும். மேலும் இத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் இவரை அணுகி சமூகத்துக்குத் தொண்டு செய்யும் நோக்கத்துடன் இந்த நாட்டுப்புற மருத்துவத் துறையை பாதுகாக்க முன்வருவார்களானால் உண்மையில் மகிழ்ச்சியே.!
பைஸாத் அஹமட்

