ஈஸ்டர் தாக்குதலின் பின்பு இலங்கை மக்களின் வாய்களில் அதிகம் பேசப்படும் ஊர்தான் காத்தான்குடியாகும். தீவிரவாதி ஸஹ்றானின் ஊர் என்பதே அதற்கான காரணமென்பது நாமறிந்ததே. அது போன்று ஹிஸ்புல்லாஹ் ஒரு தீவிரவாதியென்ற மனோ நிலை இலங்கை பேரின மக்களிடையே உள்ளமை மறுதலிக்க முடியாததொன்று. இவ்வாறான சூழ் நிலையில் தான் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறப்போகிறது. இத் தேர்தலில் ஹிஸ்புல்லாஹ்வின் நிலைப்பாடு அம் மக்களை இன்னும் சிக்கலுக்குள்ளாக்கப் போகிறது என்பதே உண்மை. ஹிஸ்புல்லாஹ் நல்லது செய்யாது போனாலும் பறவாயில்லை, அந்த மக்களுக்கு இன்னும் துன்பத்தை வழங்காதிருக்கலாம்.
இந்த தேர்தலில் ஹிஸ்புல்லாஹ்வால் ஜனாதிபதியாக முடியாது என்பது கிஞ்சித்தேனும் சந்தேகமற்ற உண்மை. அது தவிர்ந்து, இவரது தீர்மானத்தின் மூலம் முஸ்லிம் சமூகம் எந்தவித சிறு நன்மையை பெறப்போவதுமில்லை. தேசிய கட்சி ஒன்றோடு இணைந்து, தேர்தல் வேலையை பொறுப்பெடுத்து, அவர்களோடு ஒன்றிணைந்து பிரச்சாரம் செய்கின்ற போது, அதுவே ஹிஸ்புல்லாஹ்வுக்கு சிங்கள மக்களோடு ஒன்றிணைந்து செல்ல வாய்ப்பாக அமைந்திருக்கும். அவர் ஆதரிக்கும் கட்சிக்காரர்கள் சிலர் அவரை நியாயப்படுத்த முனைந்திருப்பார்கள். குறைந்தது தீவிரவாதத்தில் ஹிஸ்புல்லாஹ்வை நுழைக்காமலாவது விடுவார்கள். இச் சந்தர்ப்பத்தை, ஹிஸ்புல்லாஹ் அரசியல் இலாபத்தை கருத்தில் கொள்ளாது, தன் மீது பேரின மக்கள் முன்வைத்துள்ள தீவிர குற்றச்சாட்டிலிருந்து விடபட முயற்சித்திருக்கலாம். அது அவருக்கு பெரு வெற்றியை கொடுத்திருக்கும்.
பேரின மக்களோடு ஒன்றிணைந்து செல்ல வேண்டியதொரு விடயத்தில், தன் சுய அரசியல் இலாபத்துக்காக, முஸ்லிமென்ற நாமம் காட்டி, முஸ்லிம்களை, குறிப்பாக காத்தான்குடி மக்களை இலங்கை பேரினமக்களிடமிருந்து இன்னுமின்னும் தூரமாக்கும் செயற்பாட்டை ஹிஸ்புல்லாஹ் முன்னெடுத்துள்ளார். இவ்விடயத்தில் முஸ்லிம் சமூகம் தெளிவுற வேண்டும்.
*துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,*
*சம்மாந்துறை.*

