Ads Area

கல்முனை மாநகர சபையில் அனர்த்த முகாமைத்துவ செயலணி உதயம்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர பிரதேசங்களில் இயற்கை அனர்த்த அபாய பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ செயற்பாடுகளை கூட்டுப்பொறுப்புடன் முன்னெடுப்பதற்காக முப்பதுக்கு மேற்பட்ட அரச மற்றும் அரசசாரா நிறுவனங்களை உள்ளடக்கிய அனர்த்த முகாமைத்துவ செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

கல்முனையிலுள்ள அரச நிறுவனங்களின் பிரதானிகளுடனான உயர்மட்டக் கூட்டம் திங்களன்று (25) மாலை கல்முனை மாநகர சபையில், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே இந்த செயலணி அமைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலநிலையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டதுடன் அவற்றில் இருந்து மக்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் அனைத்து நிறுவனங்களும் பரஸ்பரம் ஒத்துழைத்து, கூட்டுப்பொறுப்புடன் செயற்படுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் திட்டமிடப்பட்டன.

கிழக்கு மாகாணத்தில் பெரு வெள்ளம் மற்றும் சூறாவளி என்பன நிகழ்ந்து 40 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவ்விரு அனர்த்தங்களும் ஏற்படுவதற்கான வாய்ப்பு நிறைய இருப்பதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எத்தகைய அனர்த்தங்கள் நிகழ்ந்தாலும் உடனடியாக சம்மந்தப்பட்ட இடங்களில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான பொறிமுறைகள் தொடர்பிலும் அவர்களை தங்க வைப்பதற்கான பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, அவர்களை பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு, தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இக்கூட்டத்தில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ், கல்முனை மாநகர பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், சுகாதார வைத்திய அதிகாரிகளான டொக்டர் என்.ஆரிப், டொக்டர் எம்.எச்.றிஸ்வின், டொக்டர் ஆர்.கணேஸ்வரன், டொக்டர் ஏ.எல்.எம்.அஜ்வத், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் எம்.ஐ.எம்.றியாஸ், நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர் ஏ.ராஜேஷ், கல்முனை மின்சார சபை அத்தியட்சகர் வீ.கௌசிகன், கல்முனை பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹித், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரொஷான் அக்தர், சுமித்ரா ஜெகதீசன். எம்.சிவலிங்கம், மாநகர சபையின் சுகாதாரப் பிரிவின் தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்ஸன், தீயணைப்பு படைப்பிரிவு பொறுப்பாளர் கே.எம்.ரூமி உட்பட சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை தமிழ் உப செயலகம் உள்ளிட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் முப்படைகளின் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe