அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து.
தாய்நாட்டின் 7வது ஜனாதிபதியை தீர்மானிக்கும் தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. இதற்கு உதவியாக இருந்த இந்நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் ஜம்இய்யா நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. இந்நாட்டு பிரஜைகளின் ஜனநாயக வாக்களிப்பால் திரு. கோதாபய ராஜபக்ஷ அவர்கள் வெற்றி பெற்று நேற்று திங்கட்கிழமை இலங்கை சோசலிஷ குடியரசின் 7வது ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக பதவிப்பிரமானம் செய்து கொண்டார். மேலும் சாதி, மத வேறுபாடின்றி தான் சேவை செய்யவுள்ளதாக தனது செய்தியில் குறிப்பிட்டார்.
எனவேஇ நாட்டு மக்கள் அனைவரும் குறிப்பாக முஸ்லிம்கள் அனைவரும் நாட்டின் அபிவிருத்தி, சமாதானம், சகவாழ்வு, பாதுகாப்பு என்பவற்றை மேம்படச்செய்ய புதிய ஜனாதிபதியோடு கை கோர்த்து செயற்படுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.
அதே நேரம், இந்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து சகல இன மக்களும் சமாதானத்துடனும் ஐக்கியத்துடனும் வாழ வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்தனைச் செய்கின்றது.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா