-பாறுக் ஷிஹான்-
அரச உத்தியோகத்தரான பெண்ணை தாக்கியதாக கூறப்படும் சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
குறித்த பெண் உத்தியோகத்தரை தாக்கியதாகக் கூறப்படும் அரச உத்தியோகத்தர் இன்று ( 06 ) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர் .
நிந்தவூர் கமநல கேந்திர மத்திய நிலையத்தில் பணியாற்றும் நிலைய முகாமைத்துவ உதவியாளர் திருமதி தவப்பிரியா சுபராஜ் ( 34 ) என்பவரை தாக்கிய சம்பவத்தில் 5 நாட்களாக தலைமறைவாகிய நிலையில் அதிகாலை (6) சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட அந்நிலையத்தின் தலைமை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமை புரியும் ஜ.எல்.ஏ.கார்லிக் என்பவர் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேக நபர் சார்பில் ஆஜரான பல சட்டத்தரணிகள் தமது தரப்பு வாதங்களை முன்வைத்து பிணை கோரிக்கையை முன்வைத்த போதிலும் நீதிவானினால் நிராகரிக்கப்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு விசாரணை நடைபெற்ற வேளை நீதிமன்ற வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம் மற்றும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெய சிறீல் உட்பட பொது அமைப்பின் பிரதிநிதிகள் பிரசன்னமாகி இருந்தனர்.
சம்பவத்தின் பின்னணி
குறித்த பெண் ஊழியர் தாக்கப்பட்டு 5 நாட்கள் ஆகியும் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட அதிகாரி மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாதிருப்பது தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் கல்முனை பிராந்திய கிளையில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.
தற்போது கடந்த 5 நாட்கள் தலைமறைவாகி இருந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த 05 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த தாக்குதலுக்குள்ளான பெண் ஊழியர் தவப்பிரியா , மேலதிக சிகிச்சைக்காக , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு , நேற்று ( 05 ) இடமாற்றப்பட்டுள்ளார் .