மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது சில அமைப்புக்கள் முஸ்லிம் வியாபாரிகள் தமிழ் பிரதேசங்களில் வியாபாரம் செய்ய முடியாது என்று கூறி வருகின்றனர் அதற்கும் பொதுஜன பெரமுன கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இது குறித்து எம்மிடம் முறையிட்டால் நாம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என பொதுஜனபெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பா.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார்.
புதுவருடம் ஒரு அபிவிருத்தி ஆண்டாக மலர்ந்துள்ளது.
எமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் சிறுபான்மை மக்கள் அனைவரும் சம உரிமையுடன் இந்த நாட்டில் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். மட்டக்களப்பில் முஸ்லிம் வியாபாரிகள் அச்சம் இன்றி எங்கும் சென்று வியாபாரம் செய்யலாம் அதனை யாரும் தடுத்தால் என்னிடம் முறையிடுங்கள் நான் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பேன்.
மட்டக்களப்பில் மூன்று கட்டமாக அபிவிருத்தி திட்டங்கள் இடம்பெறவுள்ளது.
முதலில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது, அடுத்ததாக கடந்த மகிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக்காலத்தில் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பவுள்ளது,
அடுத்ததாக கிராமங்கள் தோறும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளது. அத்துடன் வறுமையில் உள்ள இளைஞர்கள் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. எங்களது ஆட்சியில் தான் அதி கூடிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.