மட்டக்களப்பில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றும் பணிகள் ஆரம்பம்.
மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு மாநகர சபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் க. சித்திரவேல் தலைமையில் மட்டக்களப்பு பொலிஸாரின் உதவியுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
17-11-2015 ஆம் ஆண்டு குறித்த வர்த்தக நிலையத்தில் மாநகர சபையின் அனுமதி பெறப்படாமல் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாநகர சபையினால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இருந்த போதிலும் அந்த கட்டிட உரிமையாளருக்கு மேன்முறையீடு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு மே மாதம் அதற்கான நடவடிக்கையினை சட்டத்தரணி ஊடாக மேற்கொண்டிருந்தார். எனினும் தொடர் நடவடிக்கைகள் அவர்களினால் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் குறித்த கட்டிடத்தின் பகுதிகளை அகற்றுமாறு அறிவுறுத்தல் மாநகர சபையினால் வழங்கப்பட்டிருந்தது.
அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் கடந்த வாரம் இதற்கான இறுதி அறிவித்தல் வழங்கப்பட்டு அதற்கும் அவர்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் குறித்த பகுதிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டதாக மாநகர ஆணையாளர் க. சித்திரவேல் தெரிவித்தார்.
யோ.கமல்ராஜ்.