Ads Area

8 தமிழ் மக்களைக் கொன்று மரணதண்டனை விதிக்கப்பட்ட கொலைகாரனுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு.

Fauzer Mahroof

தமது வீடுகளை விட்டு வெளியேறிய எட்டுப் பொதுமக்கள் தமது வீடுகளைச் சென்று பார்ப்பதற்காக யாழ்ப்பாண நகரில் இருந்து 16 மைல்கள் தொலைவில் உள்ள மிருசுவிலுக்குச் சென்ற போது 2000 திசம்பர் 19 இல் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இலங்கை இராணுவதினால் 2000 திசம்பர் 20 இல் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டார்கள்.

1. ஞானச்சந்திரன், 
2. சாந்தன், 
3. ஞானபாலன் ரவிவீரன், 
4. செல்லமுத்து தெய்வகுலசிங்கம், 
5. வில்வராஜா பிரதீபன், 
6. சின்னையா வில்வராஜா, 
7. நடேசு ஜெயச்சந்திரன், 
8. வில்வராஜா பிரசாத்

மிருசுவிலில் இருந்து உடுப்பிட்டிக்கு இடம்பெயர்ந்த இவர்கள் தமது வீடுகளையும், உடமைகளையும் பார்ப்பதற்காகவும் அங்குள்ள காட்டில் விறகு வெட்டி வரவும் அனுமதி பெற்று திசம்பர் 19 ஆம் நாள் மிருசுவிலுக்குச் சென்ற வேளை அரைகுறையாக புதையுண்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலத்தை அங்கு கண்டிருந்தனர். அடுத்த நாள் அதே பகுதிக்குச் சென்று குறித்த சடலத்தை அடையாளங் காண முற்பட்டவேளை அங்கு நிலை கொண்டிருந்த இலங்கை இராணுவத்தினரிடம் அகப்பட்டுக் கொண்டார்கள்.

இராணுவத்திடம் அகப்பட்ட பொன்னுத்துரை மகேஸ்வரன்மட்டும்  கொடூரம் மிக்க மிருசுவில் படுகொலையின் ஒற்றைச் சாட்சியாக அவர் தப்பி வந்தார். மகேஸ்வரனின் வாக்குமூலங்களை அடுத்தே, கொலை செய்யப்பட்ட அந்த மக்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. முதற்கட்டமாக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன. அத்துடன் அங்கு முதன் முதலில் காணப்பட்ட பெண்ணின் சடலம் குறித்தும் வாக்குமூலம் அளிக்கப்பட்டது. உண்மையில் அந்தப் பெண்ணுக்கு நடந்த அநீதியை நீதிமன்றத்தினால் கண்டுபிடிக்க இயலவில்லை.

அவள் யார்? அவளுக்கு என்ன நடந்தது என்பதை இராணுவத்தினர் மறைத்திருந்தனர். அதனை நீதிமன்றத்தினாலும் கண்டுபிடிக்க இயலவில்லை. அவளுக்கு மிக மோசமான முறையில் வன்முறையும் மரணமும் நிகழ்ந்திருக்க வேண்டும். அவளின் சடலத்தை இந்த மக்கள் தேடி வந்தமைக்காகவே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். அவளின் சடலத்தை கண்ட சாட்சி என்பதற்காகவே இந்த மக்கள் அழிக்கப்பட்டார்கள். இந்த மக்களை படுகொலை செய்த இராணுவத்தினர் அவளின் சடலத்தையும் இல்லாமல் செய்து குற்றத்திலிருந்து தப்பிக் கொண்டனர்.

இந்தப் படுகொலையில் மூன்று பதின்ம வயதுச் சிறுவர்களும் ஐந்து வயதுச் சிறுவனான வில்வராசா பிரசாத்தும் அடங்கி இருந்தனர் . அத்துடன் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் 5 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அவர்கள் கழுத்து அறுக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

சர்வதேச அழுத்தங்களினால் இந்த குற்றம் தொடரபாக 14 இராணுவத்தினரை கைது செய்தனர். சாவகச்சேரி நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணை பின்னர் 2002 மே, 2இல் அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதுடன் நவம்பர் 27இல் இது தொடர்பில் விசாரிக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவொன்றை இலங்கை சட்ட மா அதிபர் நியமித்திருந்தார். பின்னர் இந்த வழக்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் 2015, ஜூன் 25ஆம் திகதி அன்று இப் படுகொலை தொடர்பான தீர்ப்பு வெளியிடப்பட்டது. எட்டுத் தமிழ் மக்களையும் கழுத்தை அறுத்து படுகொலை செய்தவர் என்ற குற்றசாட்டில் இலங்கை இராணுவத்தை சேர்ந்த சுனில் ரத்நாயக்க என்பவருக்கு மட்டும் மரண தண்டனையை கொழும்பு நீதிமன்றம் அறிவித்தது. அத்துடன் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்பட்ட நான்கு இராணுவத்தினரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்திருந்தது.

சுனில் ரத்நாயக்க அவர்களுக்கு தண்டனை அறிவிக்க பட்ட நாளில் அவரை தேசிய வீரராக கொண்டாடும் சமூக தளங்கள் உருவாக்க பட்டன. கையெழுத்து வேட்டைகள் நடத்தப்பட்டன. கடந்த ஜனாதிபதி தேர்தலில் இந்த தளங்கள் கோத்தபாயா ராஜபக்சே அவர்களுக்கு வாக்கு சேகரித்தன


கடந்து போன பௌர்ணமி நாளில் எந்த பொது அறிவிப்பும் இன்றி சுனில் ரத்நாயக்க சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார் . இலங்கை நீதித்துறையை ராஜபக்சே குடும்பம் மீண்டும் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது.ஒரு மரண தண்டனை குற்றவாளி வெறும் 4 ஆண்டுகளில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார் ஆனால் படுகொலையால் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் 19 ஆண்டுகளாக பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அல்லல்படுகின்றன.

-இனமொன்றின் குரல்
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe