கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற தங்களது உயிரை துச்சமென மதித்து டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் ஆஸ்பத்திரிகளில் முழு அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகின்றனர்.
ஆனால், உயிரை காப்பாற்ற முழுமூச்சாக யார் போராடுகிறார்களோ அவர்களையே, சில நேரங்களில் கொரோனா வைரஸ் பதம் பார்த்து விடுகிறது. குறிப்பாக, அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றுவோர்தான் இவ்வாறு கொரோனா பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இது எதனால்?
கொரோனா வைரஸ் தாக்குதல் முதன் முதலில் தொடங்கிய சீனாவின் வுகான் நகரிலேயே இதற்கான விடையும் தற்போது கிடைத்து இருக்கிறது.
அதுபற்றி இங்கே காண்போம்.
சீனாவின் வுகான் நகரில் உள்ள ஹூவ்சென்ஷான் ஆஸ்பத்திரி இதற்கான ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதுவும், வுகான் நகரில் கொரோனா தாக்குதல் உச்சத்தை எட்டியிருந்த நேரத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் முடிவுகள்
01 வார்டுகளில் தீவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளிடம் இருந்து தும்மல் மூலமும், இருமல் மூலமும் வெளியேறும் நீர்த்துளிகள் தரையிலும் பரவுகிறது. அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள தட்டுகளிலும் அது படிகிறது.
02. இந்த தட்டுகளை டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ உதவியாளர்கள் பயன்படுத்தும்போது பாதுகாப்பிற்காக கவச உடை அணிந்து இருப்பதால் கொரோனா வைரஸ் அவர்களின் உடலுக்குள் ஊடுருவ முடிவதில்லை.
03. அதேநேரம், அவர்கள் அணிந்து இருக்கும் காலணிகளில் தரையில் படிந்துள்ள கொரோனா வைரஸ் எளிதில் ஒட்டிக்கொள்கிறது. இது, அவர்கள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பயணப்படுகிறது.
அதாவது, கொரோனா வைரசை சுமந்து செல்லும் சாதனங்களாக இவர்களது காலணிகள் செயல்பட்டு உள்ளன.
05. கொரோனா பாதிப்பு காரணமாக நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு அறைகளின் தரையில் கிடந்த பஞ்சு திரட்டுகளில் இருந்து 94 சதவீதமும், பொதுவார்டு அறை ஒன்றின் தரையில் இருந்து எடுத்த பஞ்சுகளில் இருந்து 100 சதவீதமும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
06. கொரோனா நோயாளிகள் தும்மும் போதும், இருமும் போதும் வெளியேறும் நீர்த்துளிகள் காற்றில் கலந்து வேகமாக பரவுகிறது. அது வார்டை விட்டு வெளியே செல்வதால் ஆஸ்பத்திரியின் பிற இடங்களுக்கும் எளிதில் பரவி விடுகிறது.
07. இந்த நோய் தொற்று, ஹூவ்சென்ஷான் ஆஸ்பத்திரியின் கம்ப்யூட்டர் மவுஸ், கதவுகளின் கைப்பிடி, குப்பைதொட்டி போன்ற இடங்களிலும் ஒட்டிக்கொண்டு இருந்துள்ளது.
08. இதில், ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நோயாளிகள் அனுமதிக்கப்படாத பகுதியான மருந்தகங்களிலும் கூட கொரோனா வைரஸ் பரவிய நிலையில் இருந்துள்ளது.
இப்படி, எந்த நேரமும் தங்களைச் சுற்றியுள்ள கண்ணுக்கு தெரியாத கொடிய அரக்கனுடன் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் போராடுவதால்தான் தங்களையும் அறியாமல் சில நேரங்களில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி விடுகின்றனர். ஒரு சிலர் தங்கள் இன்னுயிரையும் பறிகொடுத்து விடுகின்றனர்.