Covid 19 அசாதாரண சூழ்நிலை காரணமாக வெகுநாட்களாக உலகின் அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. குறிப்பாக எமது நாட்டிலும் பல்வேறு துறைகளும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. மேலும் பல்கலைக்கழகங்கள்,பாடசாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய வேலைத்தளங்கள் ஆகியவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள காரணத்தால் எம்மில் பலரும் போதியளவான ஓய்வு நேரத்தை பெற்றுள்ளோம்.
தொடர்ச்சியாக வீட்டில் தரித்து நிற்பதன் காரணமாக மனதளவில் பாரிய நெருக்கடிகளை எதிர் நோக்கி உள்ளோம். அத்தோடு உடல் உழைப்பின் அளவு குறைவாக உள்ளமையால் உடல் ஆரோக்கியம் பாதிக்கபடும் வாய்ப்புகளும் உள்ளன. பாடசாலை விடுமுறையில் உள்ள எமது சிறார்களை பயனுள்ள விடயங்களில் ஈடுபடுத்தும் பொறுப்பும் எமக்கு உள்ளது. மிக பிரதானமாக தற்போது எதிர் நோக்கிவரும் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய சுமையையும் தாங்கியவர்களாக உள்ளோம். இவை அனைத்தையும் வெற்றிகரமான எதிர்கொள்வதற்கான சிறந்த செயற்றிட்டமாக வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கை காணப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியமானது தேசிய சூறா சபையுடன் கைகோர்த்து, பல்கலைகழக முஸ்லிம் மஜ்லிஸ்கள், இளங்கலை பட்டதாரிகள் அமைப்புகளின் உதவியோடு பல்கலைக்கழக மாணவர்களினுடாக நாடளாவிய ரீதியில் 1000 வீட்டுத் தோட்டங்கள் என்ற செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்தி செயற்படுத்தி வருகின்றது.
இயன்றளவு பயிர்களை நட்டு பூமியை வளப்படுத்துவது பொதுமக்களாகிய எமது கடமை என்பதையும், இதன்மூலம் உடலியல் ,பொருளாதார ரீதியில் பெருமளவு நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் அறிந்து வைத்துள்ளோம்.
ஆகவே வீட்டிற்கும், நாட்டிற்கும் பயனுடைய இவ் வீட்டுத்தோட்ட செயன்முறையில் பல்கலைகழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்களையும் எம்மோடு கைகோர்க்குமாறு அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பானது வேண்டிக் கொள்கிறது.