Ads Area

பேரம் பேசி சாதிப்போமென்ற சலீமின் கருத்து மொட்டுவின் சபை உறுதிமொழியை மறுக்கின்றதா...?

அரசியலை உடன்பாட்டரசியல், முரண்பாட்டரசியல், ஒப்பந்த அரசியல் என மூன்றாக பிரிக்கலாம். இதில் நாம் எந்த வகையான அரசியலை செய்ய வேண்டுமென்பதை குறித்த சந்தர்ப்பத்திலேயே தீர்மானிக்க முடியும். தற்போதைய சூழ்நிலையில் ஒப்பந்த அரசியல் மிகப் பொருத்தமானது. இதனை தான் பேரம் பேசல் அரசியல் என்றும் அழைப்பர். இச் சூழ்நிலையில் பேரம் பேசும் அரசியல் பொருத்தமான அணுகு முறையாக இருந்தாலும், சாய்ந்தமருது சபை பெறுதலுக்கு பொருத்தமானதா என்பதே அவதானிக்கத்தக்கது. அண்மையில் முகநூல் தொலைக்காட்சியில் பேசிய தோடம்பழ வேட்பாளர் சலீம், தாங்கள் மொட்டை நேரடியாக ஆதரிப்பவர்கள் அல்ல எனவும், பேரம் பேசியே சாதிக்கப் போவதாகவும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

பேரம் பேசும் அரசியல் என்பது தங்களுக்கிருக்கும் பலத்துடன் நேரடித் தொடர்புடையது. அந்த பலத்தை வைத்தே பேரம் பேசும் முறைமையை தீர்மானித்துகொள்ள வேண்டும். பேரம் பேசும் அரசியல் செய்ய தோடம்பழ அணியினரிடம் என்ன பலமுள்ளது. ஒரு குறித்த எண்ணிக்கையான சாய்ந்தமருது மக்களது வாக்குள்ளது, அவ்வளவு தான். தோடம்பழ அணியின் சொல் கேட்டு சாய்ந்தமருது மக்கள் வாக்களிக்கலாம் அல்லது வாக்களிக்காது விடலாம். அதனை வைத்து தானே வியூகமமைக்க வேண்டும். அம்பாறை மாவட்ட வாக்கை வைத்து வியூகமமைப்பது சாதூரியமானதா. அது தானே இன்று நடந்தேறியுள்ளது?

மொட்டுக்கு இத்தனை வாக்குகளை பெற்றுத் தருவோம், எங்களுக்கு சபை தாருங்கள் எனும் பேரம் பேசலை தோடம்பழ அணியினர் செய்திருந்தால், அது மிக சாதூரியமான நகர்வாக அமைந்திருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் அவ்வாறான ஒரு நகர்வையே தோடம்பழ அணியினர் செய்திருந்தனர். இன்று இந்த நகர்வு அதாவுல்லாஹ்விடம் மண்டியிட்டது எதற்காக. இதனை ஆழமாக சிந்திப்போர் தெளிவான பதிலை பெற முடியும்.

தோடம்பழ அணியின் வேட்பாளாரான சலீமின் கூற்றுப்படி, அவர்கள் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் தே.காவை பலப்படுத்தி, அதனூடாக பேரம் பேசி, சபையை பெறும் திட்டமிடலையே அமைத்துள்ளனர். இது ஓணான் விட்டு வெற்றிலை ஆயும் கதையாகிறது. மொட்டு அணியினரிடம் பேரம் பேசுதலை மேற்கொள்ள அதாவுல்லாஹ்விடமுள்ள பலமென்ன. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சாதிப்பதே அவருக்கு கிடைக்கக் கூடிய ஒரே ஒரு பலம். அம்பாறை மாவட்ட கள நிலவரங்களின் படி அதாவுல்லாஹ் ஒரு ஆசனத்தையேனும் பெறுவதற்கான வாய்ப்பில்லை. வாய்ப்புள்ளதென்று ஏற்றுக்கொண்டாலும், ஒரே ஒரு ஆசனத்தையே பெற முடியும். இந்த ஒரு ஆசனத்தின் மூலம் பேரம் பேசுவதாக இருந்தால், மொட்டு அணி ஆட்சியமைக்க ஒரு ஆசனமே தேவை என்ற நிலை வர வேண்டும். இது போன்று ஒரு ஆசனம் தேவை என்ற நிலையே அதாவுல்லாஹ்வுக்கு பேரம் பேசும் வாய்ப்பை கொடுக்கும். இது ஒரு அரிதான சந்தர்ப்பம். இந்த அரிதான சந்தர்ப்பத்தை நம்பியா தோடம்பழ அணியினர் அதாவுல்லாஹ்வின் பின்னால் செல்கின்றனர்.

இவ்விடயத்தில் தோடம்பழ அணியின் நகர்வு பிழையானது என்பது துல்லியமாகிறது. இவர்களின் இந்த நகர்வு தோல்வியடையும் போது, அது சாய்ந்தமருதுக்கான சபையை பெறுவதில் தாக்கம் செலுத்தும். தற்போது தோடம்பழ அணியினர் மொட்டணியினரிடம் நேரடியாக செல்லும் தகுதியை இழந்துவிட்டனர். குதிரைக்காக இந்த தகுதியை இழந்தது, தோடம்பழ அணியினர் வகுத்த வியூக பிழைகளில் ஒன்று. இந்த தகுதியை இழந்தது மாத்திரமல்லாது, அதற்கு முஸ்லிம்கள் வாக்களிப்பார்களா என மொட்டுவை இகழும் நிலைக்கே சென்றுவிட்டார்கள். தோடம்பழ அணியினர் இத்தனை நாளும் பட்ட பாட்டை, மொட்டுக்காக வாங்கிய ஏச்சு பேச்சையெல்லாம் குதிரையை காப்பாற்றச் சென்று வீணாக்கிவிட்டார்களே!

சாய்ந்தமருதுக்கு சபை வழங்குவோம் என்பது மொட்டணியினரின் வாக்குறுதிகளில் ஒன்று. அண்மையில் அது வர்த்தமானிப்படுத்தப்பட்டு மீளப்பெறப்பட்டிருந்தது. இப்போது சாய்ந்தமருது சபையை பேரம் பேசியே பெறப்போகின்றோம் என்றால் மொட்டணியினர் சபை விடயத்தில் பின்வாங்கி விட்டார்களா என கேட்க தோன்றுகிறது. பேரம் பேசுதல் என்பது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிடுங்கி எடுப்பது தானே! சலீமின் பேச்சு மொட்டு சபை விடயத்திலிருந்து விலகிவிட்டதையும் தெளிவு செய்கிறது.

மேற்குறித்த விடயங்களை வைத்து சிந்திக்கும் ஒருவரால், இம் முறை தோடம்பழ அணியினரின் நகர்வு சாய்ந்தமருதுக்கான தனியான சபையை பெறுவதற்கு தடையாகவே அமையும் என்பதை எவ்வித சந்தேகமுமின்றி அறிந்துகொள்ள முடியும்.

சிந்திப்போம்.. செயற்படுவோம்.. சுயநல அரசியல் அஜன்டாக்களுக்குள் மக்கள் சிக்கிவிடக் கூடாது. அது எப்பெயரில் வந்தாலும் சரியே!

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe