கெளரவ மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இலங்கையின் 13வது பிரதமராக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் இலங்கையின் புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் அவரது பதவிப் பிரமாண நிகழ்வு களனி ரஜமகா விகாரை புனித பூமியில் இடம்பெற்றது.
நான்காவது தடவையாகவும் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் 2005 முதல் 2015 வரை இரண்டு தடவைகள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார்.
2004 ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி முதன் முறையாக பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட அவர், 2018 ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இரண்டாவது முறையாகவும், 2019 நவம்பர் மாதம் 21ஆம் திகதி மூன்றாவது முறையாகவும் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்திருந்தார்.
பத்து வருட காலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவி வகித்த மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள், சுமார் முப்பது வருட காலமாக நாட்டை ஆட்கொண்டிருந்த பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து நாட்டை துரித அபிவிருத்தியை நோக்கி இட்டுச்சென்றவராவார்.
குருணாகல் மாவட்டத்தில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் - 527,364 விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டார். இது, இலங்கைப் பொதுத் தேர்தல் ஒன்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிக விருப்புவாக்குகள் என வரலாற்றில் பதிவானது.
இரண்டு முறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவி வகித்து பிரதமர் பதவிக்கு நான்காவது தடவையாகவும் தெரிவுசெய்யப்பட்ட முதலாமவர் என்றும் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் வரலாற்றில் இன்று இடம்பிடித்தார்.