Ads Area

இலங்கையின் மாட்டரசியலில் லைட்டாப் புலப்படும் விடையம் இதுதான்.

இந்தியாவில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை கொன்றார்கள். பின்னர் இறந்த மாட்டின் தோலை உரித்தவர்களை தாக்கினார்கள், இப்போது அவர்கள் மாட்டு தோலில் செய்யப்பட்ட பொருள்களை உபயோக்கிப்பவர்களை விட்டு வைக்கவில்லை அந்தளவுக்கு இந்தியாவில் மாட்டரசியல் பேசு பொருளாக மாறியிருந்தமையினையும் இருக்கின்றமையினையும்  நாம் அறிவோம்.

இன்று இலங்கையிலும் மாட்டரசியல் பேசு பொருளாக மாறியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உட்பட இன்னும் பல பேரின அரசியல்வாதிகள் பசு நேசர்களாக மாறி அவர்களின் பார்வை தற்போது மாட்டிறைச்சி மீது விழுந்திருக்கிறது. மாடறுப்பை தடை செய்து, இறைச்சியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கான யோசனையை ஆளும் கட்சியின் குழுக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்வைத்துள்ள செய்திகள் தற்போது வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது. (பேசுறதெல்லாம் யாரு..?? நம்மவர்கள்தான், மற்றவர்கள் சும்மாதான் இருக்கின்றார்கள்)

சின்னொரு பிளேஸ் பேக்குக்கு போய் வருவோம்.....கடந்த நல்லாட்சி என்ற பெயரில் அமைந்த அரசாங்க காலத்தில் களுத்துறை பயாகல இந்துக் கல்லூரியின் தைப்பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் இலங்கையில் மாடறுப்பது முழுமையாகத் தடுக்கப்பட வேண்டும் என்ற தனது எண்ணத்தை அன்று வெளிப்படுத்தியிருந்தார் அத்தோடு மாடறுப்பதைத் தடை செய்துவிட்டு உணவுக்காக மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடு குறித்து தான் நிதியமைச்சரிடம் ஆலோசனை கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

நல்லாட்சிக்கு முன்னர் ஆட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்ஷவிடம் அப்போது மாடறுப்பைத் தடுக்க வேண்டும் என பல இனத்தவர்கள் பலமான கோரிக்கையை முன்வைத்த போதும் இதற்காக இந்திர ரத்ன தேரர் என்ற பௌத்த தேரர் ஒருவர் தீக்குளித்து மரணித்த போதும் கூட மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மாட்டரசியல் பேசவில்லை, மாடறுப்பிற்கு எதிராகவும் எந்தவித நடவடிக்கையினையும் அவர் அன்று எடுத்திருக்கவில்லை.

நிற்க,

தற்போது பொதுஜன பெரமுன கட்சியினுாடாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டு மீண்டும் ஆட்சிபீடமேறியுள்ள மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் மாட்டரசியல் பரவ ஆரம்பித்துள்ளது. மாடறுப்பு விடையத்தில் அன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டிருந்த அதே நிலைப்பாட்டை தற்போது பிரதர் மஹிந்த ராஜபக்ஷவும் கொண்டிருப்பது ஆச்சரியமாகவே உள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனையைில்  ஒரு விடையம் கவனிக்கத்தக்கதாக உள்ளது அதாவது இலங்கையி்ல் மாடறுப்புக்கே தடை விதிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதே தவிர இந்தியாவைப் போன்று மாட்டிறைச்சி உண்பதற்கு தடை என்ற யோசனை முன்வைக்கப்படவில்லை மாட்டிறைச்சியினை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து உண்ணலாம் என்ற அடிப்படையிலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் நமது நாட்டிலேயே மாட்டுவளம் ஏராளமாக இருக்கும் போது ஏன் வெளிநாடுகளிலிருந்து இறைச்சி இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்ற கேள்விதான் பலரிடம் இருந்து வருகின்றது.

பிரதர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் எந்த அடிப்படையில் இவ்வாறான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்பதில் இன்னும் தெளிவில்லாதே நிலையே உள்ளது. அவர் கொண்டு வந்துள்ள இந்த யோசனையில் அவர் எதனை எதிர்பார்க்கின்றார் என்றும் இன்னும் தெரியவில்லை. மாடுகளை அறுப்பது பாவம் என்ற அடிப்படையில் இவ் யோசனையினை சமர்ப்பித்துள்ளாரா..?? அல்லது பசுவதையினை நிறுத்துவதற்காக இந்த யோசனையினை கொண்டு வந்தாரா..?? அல்லது இந்தியாவில் பீ.ஜே.பி அரசு போன்று மாடுகள் புனிதமானவை அவை வணக்கத்துக்குரியவை அவைகளை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த யோசனையினை கொண்டு வந்தாரா...?? அல்லது இதன் மூலம் ஏற்றுமதி இறக்குமதி என்ற அடிப்படையிலான பொருளாதாரத்தை மையப்படுத்தி இந்த யோசனையினை முன்வைத்தாரா..?? அல்லது இனவாதிகளை திருப்திப்படுத்த இவ்வாறானதொரு யோசனையை கொண்டு வந்தாரா...?? அதே போல் அறுக்கத் தடை என்பது பசுக்களுக்காக அல்லது எருமை மாடுகளுக்கா...?? என்ற எந்த விடையமும் அவரால் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

எது எவ்வாறாக இருந்தாலும் இலங்கையில் மாடுகளை அறுப்பதற்கு தடை விதித்து இறைச்சியினை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதானது நாட்டுக்கும், நாட்டு வளத்திற்கும், பொருளாதார வளத்திற்கும் மக்களுக்கும் செய்யும் மிகப்பெரும் துரோகமாகவே அமையும்.  நமது நாட்டில் தேவைக்கு அதிகமான அளவுகளில் மாடுகள் இருக்கும் போது மாட்டிறைச்சியினை இறக்குமதி செய்வதானது அதிக செலவினத்தையும், நஷ்டத்தையும், தேவையில்லாத விலையுயர்வையுமல்லவா ஏற்படுத்தப்ப போகின்றது. மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப்பட்டால் இலங்கையில் இப்போது இருக்கும் விலையை விட அதிக விலை கொடுத்தே மாமிசத்தை வாங்கும் நிலை ஏற்படும். உள்நாட்டில் தாராளமான வளம் இருக்கும் போது, வெளிநாட்டிலிருந்து ஒன்றை இறக்குமதி செய்து கூடிய விலைக்கு அதை மக்களுக்கு கொடுப்பது நல்லதொரு அரசின் பணியாக ஒரு போதும் இருக்காது! 

வெளிநாட்டிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப்பட்டால் பழைய பதப்படுத்தப்பட்ட இறைச்சியையே மக்கள் தொடர்ச்சியாக உண்ண நேரிடும். நாட்டிலே இதற்கு நல்ல வளம் இருக்கும் போது பதப்படுத்தப்பட்ட பழைய இறைச்சியை நாட்டு மக்களுக்கு வழங்கும் போது பாரிய சுகாதாரப் பிரச்சினையினை நாட்டு மக்கள் சந்திக்க நேரிடும்.  வெளிநாட்டிலிருந்து இறைச்சி இறக்குமதி செய்யப்பட்டால் ஹலால் முறையில் அறுக்கப்பட்டதுதானா? என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு ஏற்படும். இந்த நிலைமை இறைச்சி விற்பனை பாரிய வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்பதையும் ஒருபுறம் சிந்திக்க வேண்டும்.

இலங்கையில் மாடறுப்புக்கு தடை விதித்தால் அதனால் பாதிக்கப்படப் போவது மாடுகளை வியாபாரம் செய்யும் சிங்களவர்கள்தான், நாட்டில் உள்ள பெரும்பாலான நகர சபைகள், மாநகர சபைகள், பிரதேச சபைகளின் வருமானம் பாதிக்கப்படும், மாடுகள் அறுக்கப்படுவது நிறுத்தப்பட்டால் நாட்டில் மக்களின் சனத்தொகையினை விட மாடுகளின் சனத்தொகை அதிகரித்துச் செல்லும், மாடுகள் பல்கிப் பெருகுவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும், மாடறுப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டால் அது இயற்கை சமநிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், மாடறுப்பு தடை செய்யப்பட்டால் கால்நடை உற்பத்தியை நம்பியுள்ள பல இலட்சம்   குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும், மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப்படுவதனால் ஏனை இறைச்சி வகைகளின் விலை அதிகரிக்கும், விற்க முடியாத மாடுகளை வைத்துக் கொண்டு அவற்றுக்கு செலவளிக்க முடியாத சிங்களவர்கள் அரசுக்கு எதிராக வசை பாடுவார்கள், மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படுமாயின் அதற்காக பதிலீட்டு நுகர்வுப் பொருட்களின் கேள்வியும் விலையும் அதிகரிக்கும் என்றெல்லாம் நாம் முகநுாலில் புலம்புவதை எல்லாம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிந்திக்காமலா இவ்வாறானதொரு யோசனையை முன்வைத்திருப்பார் நிச்சயம் இராது, இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஏதோ ஒரு காரணம் இருக்கத்தான் செய்யும் அதனை காலம் நமக்குச் சுட்டிக்காட்டத்தான் போகின்றது, பொறுத்திருந்து பார்ப்போம். 

இலங்கையில் தற்போது பரவியுள்ள மாட்டரசியல் விடையத்தை வலது-இடது-முன்-பின்-யூட்டேன் என எந்தத் திசையில் நோக்கிப் பார்த்தாலும் இனவாதிகளை திருப்திப்படுத்துதல், ஏற்றுமதி-இறக்குமதி மூலம் வியாபார வியூகம் அமைத்தல் என்ற விடையங்களே லைட்டா புலப்படுகிறது.

அன்சார்
சம்மாந்துறை.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe