கிழக்கில் நேற்று புதன்கிழமை இரவு 8.18 வரை வெளிவந்த பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து கிழக்கில் 473 ஆக தொற்றாளர் அதிகரித்துள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார பிரிவின் கீழ் உள்ள அக்கரைக்கரைப்பற்று சந்தை ஊடாக 305 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா பரவலை அடுத்து அக்கரைப்பற்று சந்தையில் இருந்து நேற்று இரவு கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் கொவிட் 19 நாளாந்தம் வெளியிடும் அறிக்கையின் பிரகாரம் 305 பேருக்கு தொற்று என கண்டறியப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் 4 சுகாதார பிராந்தியங்களான மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் 96 பேருக்கும், திருகோணமலை சுகாதார பிராந்தியத்தில் 18 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 359 பேருமாக மொத்தம் 473 பேர் நேற்று இரவு வரையில் கண்டறியப்பட்டுள்ளனர்.
இரவு 8.18 மணிவரையில் புதிதாக அக்கரைப்பற்றில் 6 பேரும், ஆலையடிவேம்பில் 3 பேரும் காத்தான்குடியில் ஒருவரும், அம்பாறையில் ஒருவரும், உகணையில் 3 பேரும், அட்டாளைச்சேனையில் 2 பேர் உட்பட 16 பேர் கிழக்கில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கிழக்கில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை ஆகிய 3 பிரதேச செயலகப்பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் நாளாந்தம் இடம்பெறும் பி.சி.ஆர் பரிசோதனையில் பரவல் தொற்று அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.