Ads Area

கல்முனை ஆதார வைத்தியசாலையில் மார்பு புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான நவீன சோதனை (screening) வசதிகள் ஆரம்பமாகிறது.

காரைதீவு சகா.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் மார்பு புற்றுநோயை கண்டறிவதற்கான சிகிச்சை (screening) ஆரம்பமாகிறது.

இச் சிகிச்சையானது, கிழக்கிலங்கையில் 4 வைத்தியசாலைகளில் ஆரம்பிக்க சுகாதார அமைச்சு அனுமதித்துள்ளது. இதில் கல்முனை பிராந்தியத்தில்,  கல்முனை ஆதார வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டமை இப் பிரதேச மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாகும்.

இச்சேவையானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11/12/2020) காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், நோய் அறிகுறிகள் தென்படும் பெண்கள், அல்லது 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் இதனை பயன்படுத்த முடியும்  எனவும் தெரிகிறது . இதற்கு தேவையான ஒழுங்குகளை வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி இரா. முரளீஸ்வரன் அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்.

இச்சிகிச்சையானது நோயின் தன்மை, அறிகுறிகளுக்கு ஏற்ப மூன்று பரிசோதனைக்களாக (triple  assessment) நடத்தப்படவுள்ளது அதாவது,


01. வைத்திய பரிசோதனை (clinical assessment)

02. உருவப்படுத்தல் (Imagery)

03. நோயியல் (pathology)  என மூன்று வகைப்படுகிறது.


இச்சிகிச்சையானது காலை 8.00- 9.30 வரை பார்வையிடப்பட்டு தேவையின் தன்மைக்கு ஏற்ப ஏனைய பரிசோதனைகளுக்கு அனுமதிக்கப்பட்டு நோய்கள் இனங்காணப்படவுள்ளது.

நோயின் அறிகுறிகளுக்கு ஏற்ப முன்னுரிமை வழங்கப்படலாம்.

2018 தரவுகளின் படி இலங்கையில், பெண்களில், இனங்காணப்பட்ட புற்று நோய்களில், 24% மார்பக புற்றுநோயாகவுள்ளது. ஆண்டிற்கு 3000-3500 பெண்கள் இப்புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நோயை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சைகளை ஆரம்பிப்பதனால், பாரதூரமான விளைவுகளைத் தவிர்த்துக்கொள்ளலாம்.

எனவே 35 வயதிற்கு மேற்பட்டவர்கள், அல்லது நோய் அறிகுறிகள் தென்படும் பெண்கள்

அனைவரும், இதனை பயன்படுத்தலாம். என கல்முனை ஆதார வைத்தியசாலையின் சுகாதார கல்விப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் சோமசூரியம் திருமால்  தெரிவித்தார்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe