கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையின் போது குறுக்கே சென்ற மகள் மீது தந்தையார் தாக்கியதையடுத்து அவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தந்தையார் வீட்டின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக அம்பாறை திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
அம்பாறை திருக்கோவில் 2 ம் பிரிவு நல்லையா வீதியைச் சேர்ந்த 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராசமாணிக்கம் சுகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே சம்பவதினமான இன்று பகல் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன்போது தாயாரை தந்தை தாக்க முற்பட்ட போது மகள் குறுக்கே சென்ற போது அவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார்.
இதனால் அவர் காயமடைந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து மனைவி வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் வீட்டில் எவரும் இல்லாத போது மகளை தாக்கிய குற்ற உணர்வினை தாங்க முடியாமல் வீட்டின் அறையின் கூரையில் புடவை ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.