(ஜெஸ்மி எம்.மூஸா)
பாடசாலைகளுக்குள் நுழைந்து தங்கள் பிள்ளைகளை பலவந்தமாக பெற்றோர் அழைத்துச் சென்ற சம்பவமொன்று சம்மாந்துறைப் பாடசாலைகளில் நடைபெற்றுள்ளது
இச் சம்பவத்தால் சம்மாந்துறை பிரதேசப் பாடசாலைகளில் அல்லோல கல்லோல நிலைமை ஏற்பட்டதனை அவதானிக்க முடிந்தது.
சில பெற்றோர் பிள்ளைகளை அழைத்துச் சென்ற நிலையில் தொடராகப் பாடசாலைகளை நோக்கிப் படையெடுத்த பெற்றோர் பாடசாலைகளின் நுழைவாயிலை முற்றுகையிட்டதுடன் தங்கள் பிள்ளைகளைத் தருமாறு நிருவாகத்தினரிடம் மன்றாட்டத்தில் ஈடுபட்டனர் இச்சம்பவம் இன்று(19) செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது
இது பற்றித் தெரியவருவதாவது
பாடசாலைகளில் மாணவர்களுக்கு பீ.சி.ஆர் எடுப்பதாகவும் சில மாணவர்களை பொலிஸாரும் சுகாதாரத் தரப்பினரும் பாடசாலைகளுக்குச் சென்று அழைத்துச் சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்ட வதந்தியை அடுத்தே மேற்படி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதனைக் கேள்வியுற்ற பெற்றோர் தம்பிள்ளைகளை வீட்டுகளுக்கு அழைத்துச் செல்ல முனைந்த போதே பாடசாலைகளில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது
குறித்தவொரு பாடசாலைக்குச் செல்லும் பெற்றோர் சம்மாந்துறையிலுள்ள வேறு ஒரு பாடசாலையைக் கூறி அங்கு பீ.சீ.ஆர். எடுக்கப்படுகிறது. தங்கள் பிள்ளைகளைத் தாருங்கள் என அழைத்துச் சென்றுள்ளனர்.
விடயத்தை ஆரந்த போது மாணவர்களைப் பீ.சீ.ஆர். எடுத்த சம்பவம் எதுவும் சம்மாந்துறை வலயப் பாடசாலைகளில் நடக்கவில்லையென்று தெரியவந்துள்ளது. சுகாதார நடவடிக்கை தொடர்பில் பாடசாலையொன்றிற்குத் தரிசித்த சுகாதாரப் பரிசோதகர்களைக் கண்டே இவ்வாறான வதந்தி பரப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது
மாணவர்களுக்கு பீ.சீ.ஆர். எடுத்த நிகழ்வுகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் இது வதந்தியென்றும் பாடசாலைகளுக்கு விஜயம் செய்த பொலிசார் தெரிவித்தனர். எனினும் அது பயனளிக்கவில்லை. மாகாண மட்டப் பரீட்சைக்குத் தோற்றிக் கொண்டிருந்த மாணவர்கள் இடைநடுவில் பெற்றோர்களுடன் அனுப்பப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தால் ஆசரியர்களைத் தவிர மாணவர்கள் எவரும் இல்லாத நிலையில் பாடசாலைகள் வெறிச்சோடிக் கிடந்தை அவதானிக்க முடிந்தது
பாடசாலை மாணவர்களைக் குழப்புகின்ற வதந்திகள் கல்முனைப் பிரதேசப் பாடசாலைகளிலும் கடந்த வாரம் பரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இவ்வாறான வதந்திகள் மூலம் மாணவர்களின் கல்வியில் விளையாடுவோர் மீது பெற்றோரின் விழிப்புணர்வு அவசியமாகும்.