தமிழ் அரசியல்வாதிகள் பிரதேச மத சாதி அரசியல் பேதங்களை மறந்து ஒன்றுகூடிப்பேசவேண்டும்! கூறுகிறார் அம்பாறை மாவட்ட ஸ்ரீல.சு.கட்சிஅமைப்பாளர் ஜெயச்சந்திரன் .
நாம் தமிழ் அரசியல்வாதிகள் பிரதேச மத சாதி அரசியல் சகல பேதங்களையும் மறந்து ஒன்று கூடிப் பேச வேண்டும். நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. சுருங்கி வரும் தமிழ்க் கிராமங்களையிட்டு பேச வேண்டும்.அப்போதுதான் அவை பாதுகாக்கப்படும். எனவே ஒன்றுபடுவோம் வாரீர்.
இவ்வாறு சம்மாந்துறை பிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அம்பாறைமாவட்ட அமைப்பாளருமான வெள்ளி ஜெயச்சந்திரன் அறைகூவல் விடுத்தார்.
திரு.ஜெயச்சந்திரன் 2018.02.10ஆம் திகதி நடைபெற்ற சம்மாந்துறை உள்ளுராட்சிசபைத் தேர்தலில் வளத்தாப்பிட்டி வட்டாரத்தில் ஸ்ரீ.ல.சு.கட்சி சார்பாக போட்டியிட்டு 1032 வாக்குகளைப் பெற்று உறுப்பினரானார்.அன்றைய களநிலைவரப்படி ஸ்ரீல.சு.கட்சியின் ஆதரவு ஆட்சியமைக்க தேவைப்பட்டதால் அவர் கட்சியால் உபதவிசாளராக நியமிக்கப்பட்டார்.
அத்தருணம்; பேசிக்கொண்டதற்கமைவாக இருவருடங்களின் பின்னர் தனது சகஉறுப்பினரான அச்சிமொகமட்டிற்கு தனது உபதவிசாளர் பதவியை இராஜினாமாச்செய்து 2020.02.11ஆம் திகதி மனச்சாட்சிப்படி ஒப்படைத்துவிட்டு உறுப்பினராகப் பணியைத் தொடர்ந்தார். இந்நிலையில் தன்னுடன் தனதூரில் இணைந்து தேர்தல் வெற்றிக்கு பக்கபலமாக நின்ற திருமதி தவசீலன் குலமணிக்கு தனது உறுப்பினர் பதவியை மனச்சாட்சிப்படி ஒப்படைப்பதற்காக கடந்த10 ஆம் திகதி இராஜினாமாச்செய்துள்ளார்.
இது இவ்வாறிருக்க தேர்தலுக்குமுன் பகிரங்கமாக ஒருவருடத்தின் பின் அல்லது இருவருடத்தின்பின் பெற்ற பதவியை சக வேட்பாளருக்கு ஒப்படைப்பேன் என்று சட்டத்தரணிமுன் ஒப்பமிட்டவர்களே பதவியில் தொடர்ந்து வலிந்திருக்க ஆசைப்பட்டகாலம் இது. காலத்தை நீடிக்கவே விரும்பினார்கள். சேவையென்று எதையும்செய்யாமல் நீடித்தார்கள். அப்படிப்பட்ட ஆசையுள்ளவர்கள் இருக்கின்ற இக்காலகட்டத்தில் திரு.ஜெயச்சந்திரன் போன்றவர்கள் உண்மையில் உயர்ந்தவர்கள் மானஸ்தர்கள் ஜென்ரில்மன் எனலாம்.
அம்பாறை மாவட்ட ஸ்ரீல.சு.கட்சி அமைப்பாளரான வி.ஜெயச்சந்திரன் அவரது சேவைக்காலத்தில் பல கோடிருபாக்களை கொணர்ந்து தமிழ்ப்பிரதேசங்களில் பல அபிவிருத்திவேலைத்திட்டங்களை செய்துசாதனைபடைத்தவர்.இறுதியாக தற்போது மல்வத்தை கோவில் வீதிக்கு 1கோடி ருபா பெறுமதியான எல்ஈடி பல்ப்புகளை பொருத்திவருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் அரசியல் சேவையாளர் என்றஅடிப்படையில் நேர்காணலுக்கென நீங்கள்கூறும் செய்தி என்ன எனக்கேட்டபோது அதற்குப்பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவருடனான நேர்காணலைத் தருகிறோம்.
கேள்வி: நீங்;கள் சு.கட்சியைச்சேர்ந்தவர். உங்களைப்போன்ற தமிழ்அமைப்பாளர்கள் பலர் இருந்தும் நீங்கள் செய்தசேவைபோல் ஏனையோர் செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.அப்படி மக்களுக்கு என்ன சேவைகள் செய்தீர்கள்?
பதில்: ஆம். சுமார் 13கோடி ருபாக்களைக்கொண்டு வந்துள்ளேன். அரசாங்க அமைச்சர்கள் எம்பிக்கள் ஆளுநர் என பலதரப்புகளிடம் சென்று அணுகி மேற்படி தொகையைக்கொணர்ந்து இப்பிரதேசமெங்கும் விளம்பரமில்லாமல் அபிவிருத்திப்பணிகளைச் செய்துள்ளேன். அதைவிட மல்வத்தை வைத்தியசாலை தரமுயர்த்தல் போன்ற பணிகளையும் செய்துள்ளேன்.
கேள்வி: 13கோடியா? தமிழ்அமைப்பாளர் ஒருவர் இத்தகைய தொகையைகொணர்ந்தது சாதனைதான். வாழ்த்துக்கள். அதற்கு என்னவகையான வேலை செய்தீர்கள். மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
பதில்: மல்வத்தை சந்தை ஏகப்பட்ட வீதிகள் மலசலகூடங்கள் வாழ்வாதாரஉதவிகள் புளொக்கல்வெட்டும் இயந்திரங்கள் தண்ணீர்வசதி ஏற்படுத்தல் போன்ற பதரப்பட்ட சேவைகளை மல்வத்தை வளத்தாப்பிட்டி வீரமுனை காரைதீவு நாவிதன்வெளி சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் செய்துள்ளேன்.
பளவெளி சிவனாலயத்திற்கு இதுவரை 1கோடி 40லட்சருபாவைப் பெற்றுக்கொடுத்துள்ளேன.புதிய வளத்தாப்பிட்டி நாவலர் வித்தியாலயத்தில் இரண்டு வகுப்பறைக்கட்டடத்தை கட்டிக்கொடுத்துள்ளேன்.
கேள்வி.ஜனாதிபதியின் 1லட்சம் வேலை வாய்ப்பில் தமிழ்இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டதாகக்கூறப்படுகிறதே?
பதில்: நான் ஸ்ரீலங்காசுதந்திரக்கட்சியைச் சேர்;தவன். அதற்கு எமக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. சு.கட்சியைசேர்ந்த சிறியாணி அம்மையார் தேர்தலில் தோற்றதேகாரணம். பொதுஜனபெரமுனையைச்சேர்;;ந்த பெரும்பான்மையினத்தவர்க்கே வழங்கப்பட்டுள்ளது.அதனால் அவரது எமது அமைப்பாளர்களால் வழங்கப்படுவதாகஅறிந்தேன். அதுவும் திருப்தியில்லை என்பதையுமறிவேன்.
கேள்வி: நடந்துமுடிந்த பொத்துவில் பொலிகண்டி பேரணி பற்றி தங்கள் அபிப்பிராயம் என்ன?
பதில்: அது அவசியமானதொன்று.வரவேற்கிறேன். தமிழர் பிரச்சினைகள் நியாயமான அமைதிப்போராட்டத்தின்மூலம் வெல்லப்படவேண்டும் என்பதில் நானுறிதியாகவிருக்கிறேன்.
கேள்வி: மேய்ச்சல்தரை விவகாரத்தை நீங்கள்; எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்: பெரும்பான்மையின் எப்போதும் ஆக்கிரமிப்பிலே முனைப்புக்காட்டி வருகிறார்கள். காணிகுறைவாகவுள்ள தமிழ்பேசும் மக்கள் வாழுகின்ற பகுதிகளில் தினம் தினம் ஆக்கிரமிக்கிறார்கள். புத்தரைவைக்கிறார்கள். அவர் உண்மையில் தத்துவஞானி. நல்லவர்.ஆனால் அவரை வைத்து ஆக்கிரமிப்பை மெதுவாக நகர்த்துவது ஆரோக்கியமானதல்ல.
கேள்வி: மல்வத்தை வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளதா?
பதில்: ஆம். இப்பிராந்திய மூவினமக்களுக்கும் அருஞ்சேவையாற்றிவரும் மல்வத்தை வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டமை நீண்டவரலாறு.அண்மையில் கொவிட்காரணமாக சாதாரணமாக அத்தரமுயர்த்தல்வைபவம் நடைபெற்றது. இதற்கென எனது வகிபாகத்தை மக்கள் நன்குஅறிவார்கள். இன்று அது பிரதேசவைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. வைத்தியர் தாதியர் என ஆளணி படிப்படியாகக்கிடைக்கப்பெற்றுவருகிறது. மகிழ்ச்சி.
கேள்வி: தங்களது புதியவளத்தாப்பிட்டியின் சந்தை தபாலகம் எல்லாம் 1996இ;;ல் அமைச்சர் அஸ்ரப் திறந்தகாலத்திற்கு மூடிக்கிடக்கிறதே?
பதில்: உண்மை. மல்வத்தை உபதபாலகம் தரமுயர்த்தப்படும்போது இது திறக்கப்படும்.தபால்திணைக்களத்தின் நடைமுறைஅது. சந்தையை அங்காடிபோல் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.அதற்கென 2மில்லியன்ருபாவை பெற்றுள்ளேன்.
கேள்வி: உறுப்பினர் பதவியை இராஜினாமாச்செய்துள்ளீர்கள். உங்கள் பணி தொடருமா?
பதில் : நிச்சயமாக.மனச்சாட்சிக்கு விசுவாசமாக எனதுபதவியை எவ்வித அழுத்தங்களுமில்லாமல் நானாகவே ஒப்படைத்தேன். எனக்கு அது மகிழ்ச்சி திருப்தி. வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை. எதுவும் வரும் போகும். காரைதீவு மல்வத்தை கல்முனை கலாசாரமண்டபங்களை பூர்த்திசெய்யவேண்டும்.
கேள்வி: சம்மாந்துறை பிரதேசசபையின் செயற்பாடுகளி;ல் திருப்தி காண்கிறீர்களா?; பதில்: ஆம். சம்மாந்துறைபிரதேசசபை திருப்தியாக நடக்கிறது. எந்தப்பிரச்சினையுமில்லை.
கேள்வி: மல்வத்தையை மையமாகவைத்து மற்றுமொரு பிரதேசசபைஉருவாவதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்: அதிகாரப்பங்கீட்டுக்கு ஆதரவானவன் நான். ஏலவே சம்மாந்துறையிலிருந்து இறக்காமம் நாவிதன்வெளி பிரித்துக்கொடுக்கப்பட்டது. எமது மக்களின் தேவைகளை நிறைவேற்ற பிரதேசசபை அவசியமென்றால் அதனை வழங்குவதில் தவறில்லை. மல்வத்தையை மையமாகக்கொண்ட 3கிராமசேவையாளர்பிரிவுகளைக்கொண்ட தனியான சபை உருவாவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளேன்.
நேர்காணல் . வி.ரி.சகாதேவராஜா.