சம்மாந்துறை அன்சார்.
இலங்கையில் தடையில் இருந்து வந்த கொரோனா தொற்றினால் மரணமான முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய இலங்கை அரசாங்கம் அனுமதியளித்தமைக்கு உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் ஷேக் முஹம்மது அல்-இசா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் திணேஸ் குணவர்த்தன அவர்களை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டே உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் ஷேக் முஹம்மது அல்-இசா பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் இந் நடவடிக்கையானது உலக முஸ்லிம் லீக்குக்கும் இலங்கைக்குமான உறவை மேலும் பலப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவினால் மரணமானவர்களின் உடல்களை அடக்கம் செய்வதினால் நிலக்கீழ் நீர் மாசடையும் எனத் தெரிவித்து உடல்களை அடக்கம் செய்ய இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் ஏப்ரல் மாதமளவில் தற்காலிக தடை விதித்திருந்தது. இத் தடையினை நீக்கக் கோரி இலங்கையில் வாழும் முஸ்லிம் அமைப்புக்கள், அரசியல்வாதிகள் மற்றும் உலக நாடுகள் என அனைவரும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருந்தனர்.
இந் நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 57 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் (Organization of Islamic Cooperation (OIC) ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் இந் நடவடிக்கையினை விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.