(எஸ்.அஷ்ரப்கான்)
அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி-காரைதீவு பிரதான பாதையின் தெருவிளக்குகள் பிந்திய இரவுகளில் அணைக்கப்படுவதால் பாதசாரிகளும் அண்மையில் வசிக்கும் குடியிருப்பாளர்களும் அதிகளவிலான இன்னல்களை அனுபவித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டு காரைதீவு பிரதேச சபைக்கு அண்மையில் கையளிக்கப்பட்டிருக்கும் இந்த மின்விளக்குத் தொகுதிகள் சில நாட்களில் பகல் வேளைகளில் ஒளிர்வதும் இரவு 10 மணியளவில் ஒவ்வொரு நாளும் அணைக்கப்பட்டு வருவதும் வாடிக்கையாகவுள்ளது.
நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளின் பிரதான பாதைகளில் ஒன்றான இந்த பாதையில் நூற்றுக்கணக்கான யானைகளின் நடமாட்டம் அண்மைய காலங்களில் உள்ள போதிலும், மின்விளக்குகளை அணைத்து விடும் செயலானது மிகப்பெரும் ஆபத்தானவொன்றாக விளங்குகிறது.
காரைதீவு பிரதேச சபை இது விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கையெடுத்து விபத்துக்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க முன்வரவேண்டுமென பாதசாரிகள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.