தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார்.
நடிகர் விஜய் திடீரென சைக்கிள் மூலம் வந்து வாக்குப்பதிவு செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை பின்தொடர்ந்து ரசிகர் ஏராளமானானோர் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
பொதுவாக நடிகர் விஜய் தேர்தல் நடைபெறும் இடத்திற்கு காரில் சென்று வரிசையில் நின்று வாக்களிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை சைக்கிளில் சென்று வாக்களிக்க சென்றிருப்பது இணையத்தில் பல்வேறு யூகத்தின் அடிப்படையில் பல கருத்துக்களை இணையவாசிகள் முன்வைத்து வந்தனர். இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் விஜய்யின் பிஆர்ஓ ரியாஸ் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் ”விஜய் வாக்கு செலுத்தும் பள்ளி அவரது வீட்டின் பின்புற தெருவில் அமைந்துள்ளதால் என்பதாலும், அந்த பகுதி மிகவும் ஒடுக்கமான பகுதி மேலும் கார் நிறுத்துவதற்கு போதிய வசதியில்லததால் அவர் சைக்கிளில் சென்றார் வேறு எந்த காரணமும் கிடையாது” என்றும் தெரிவித்துள்ளார்.