Ads Area

கொரோனாவால் ஊழியர் உயிரிழந்தால், குடும்பத்துக்கு 5 ஆண்டுகள் முழு சம்பளம் - ரிலையன்ஸ் அறிவிப்பு.

கொரோனாவால் பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்களுடைய குடும்பத்துக்கு 5 ஆண்டுகளுக்கு அவர் கடைசியாக வாங்கிய ஊதியமும், அவருடைய குழந்தைகளின் படிப்பு செலவும் ஏற்க்கப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. கொரோனா இரண்டாவது அலையிலிருந்து மீண்டெழுவது என்பது மிகப்பெரும் சவாலான காரியமாக இருந்துவருகிறது. கொரோனா பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு மற்றும் அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறது. அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனமான ரிலையன்ஸ் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் பணியாளரின் குடும்பத்துக்கு பல்வேறு நல்வாழ்வுத் திட்டங்களை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நம்முடைய ரிலையன்ஸ் குடும்பத்தில் ஒவ்வொருவருடைய இழப்பும் ஈடுசெய்யமுடியாதது. நம்முடைய கூட்டு மனசாட்சியை கடுமையாக பாதிக்கக் கூடியது. நம்முடைய அன்புக்குரியவர்களின் இழப்பை எதைக் கொண்டும் ஈடு செய்யமுடியாது. இந்த கடுமையான நேரத்தில் நம்முடைய நம்பிக்கை மட்டும் வலிமையைக் கொண்டு ஒவ்வொருவருக்கும் உதவ வேண்டிய கடமையை நாம் கொண்டுள்ளோம்.

கொரோனாவால் உயிரிழந்த நம்முடைய பணியாளர்களின் குடும்பத்துக்கு துணையாக இந்த துயரமான நேரத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் துணைநிற்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் குடும்ப ஆதரவு மற்றும் நல்வாழ்வு திட்டங்களை அறிவித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த பணியாளரின் குடும்பத்துக்கு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு அவர் கடைசியாக வாங்கிய ஊதியம் மாதந்தோறும் வழங்கப்படும்.

உயிரிழந்த பணியாளரின் குழந்தைகளுக்கு அவர்கள் இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் வரை இந்தியாவின் எந்த கல்வி நிறுனத்தில் படித்தாலும் அதற்குரிய கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் செலுத்தப்படும்

உயிரிழந்த பணியாளரின் குழந்தை இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும்வரை மனைவி, பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கான முழு மருத்துவத் செலவு, வழங்கப்படும்.

கொரோனாவால் பணியாளர் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படும் சூழலில் அவர்களுக்கு சிறப்பு கொரோனா கால விடுப்பு வழங்கப்படும்.

மேலும், நேரடி ஊதியம் பெறா பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மூலம் மொத்தமாக 10 லட்ச ரூபாய் வழங்கப்படும்.

ரிலையன்ஸ் பணியாளர்களே, இந்த கடினமான காலத்தில் நீங்கள் தனியாக இருப்பதாக நினைத்துக் கொள்ளவேண்டாம். ஒட்டுமொத்த ரிலையன்ஸ் நிறுவனம் உங்கள் ஒவ்வொருவருடன் துணைநிற்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe