( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 யைத் தாண்டியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் இரு பெரும் சுகாதாரப்பிரிவுகள் உள்ளன. அவை அம்பாறைப் பிராந்தியம் மற்றும் கல்முனைப் பிராந்தியம் என்பனவாகும்.
இவற்றில் கல்முனைப் பிராந்தியத்தில் இதுவரை 68 மரணங்களும் அம்பாறைப் பிராந்தியத்தில் 35 மரணங்களும் சம்பவித்துள்ளன. அதாவது இதுவரை கொரோனாவால் 103 பேர் மரணித்துள்ளனர்.
கல்முனைப் பிராந்தியத்தில் ஏற்பட்ட 68 மரணங்களுள் அதிகூடிய 9 மரணங்கள் கல்முனை தெற்கு சுகாதாரப் பிரிவிலும், 10 மரணங்கள் சம்மாந்துறை பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
அடுத்ததாக சாய்ந்தமருது மற்றும் அக்கரைப்பற்று பிரிவுகளில் தலா 7 மரணங்களும், அட்டாளைச்சேனை ,நிந்தவூர் மற்றும் காரைதீவுப் பகுதிகளில் தலா 6 மரணங்களும், இறக்காமப் பகுதியில் 5 மரணங்களும் ,ஆலையடிவேம்பு பகுதியில் 4 மரணங்களும் ,பொத்துவில் மற்றும் கல்முனை வடக்கு பகுதியில் தலா 3 மரணங்களும் சம்பவித்துள்ளன.
இறுதியாக கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலையில் கல்முனை தெற்கைச் சேர்ந்த 71 வயதான நபரொருவர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக இதுவரை ஒரு மரணமும் பதியப்படாத தனியொரு பிரதேசமாக திருக்கோவில் சுகாதாரவைத்திய அதிகாரிப் பிரதேசம் மிளிர்கிறது.
இதேவேளை அம்பாறைப் பிராந்தியத்தில் அதிகூடிய தொற்று கடந்த இரு நாட்களில் இடம்பெற்றுள்ளது. நேற்று மட்டும் 188 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு இதுவரை கல்முனைப் பிராந்தியத்தில் 3695 தொற்றாளர்களும், அம்பாறைப்பிராந்தியத்தில் 2601 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்..
அதனால் அம்பாரைக்கு 14 ஆயிரம் தடுப்பூசிகள் நேற்று முன்திம் மேலதிகமாக வழங்கப்பட்டது..அதேபோல் ,மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 31 ஆயிரம் ஊசிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை கல்முனைக்கு 50 ஆயிரம் வக்சீன்களும் ,அம்பாறைக்கு 62315 வக்சீன்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.