காரைதீவு நிருபர்.
என்னை இனவாதியாக சித்தரித்து அரசியலிலிருந்து ஓரங்கட்ட மேற் கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சியே இது. எனக்கும் நபிகள் நாயகம் பற்றிய பதிவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என காரைதீவு பிரதேச சபைத்தவிசாளர் ஜெயசிறில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
கண்மணி நபிகள் நாயகம் அவர்கள் ஓர் உன்னதமான அற்புதமான இறைதுதாதர். அவரை அவமதித்ததாக என்னைத் தொடர்புபடுத்தி முகநூலில் சிலர் படு கேவலமாக விமர்சித்து வருகின்றனர்.
போலி முகநூல் பதிவை எனது பெயரில் பதி விட்டு தூற்ற ஆரம்பித்துள்ளனர். அதையிட்டு கவலைப்படவில்லை. ஆனால் இறைதூதரின் பெயரைப் பயன்படுத்தி தூற்றுவதையிட்டே கவலையடைகிறேன்.
வெறும் அரசியலுக்காக அந்தமாமனிதரை கொச்சைப் படுத்தவேண்டாம். எந்த மதமானாலும் எந்த இறைவனானாலும் பொதுவெளியில் இவ்வாறு அவமானப்படுத்தப்படக்கூடாது.
தாயின் காலடியில் சுவர்க்கத்தைக்காணலாம் என்றார் அவர் . அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம் என்கிறோம் நாம். தாயின் மகத்துவத்தை அனைத்த சமயங்களும் உயர் நிலையிலேயே வைத்துபோற்றுகின்றன. அதுபோல சகல சமயங்களும் போதனைகளும் மனிதர்களை புனிதனாக்கவே நல்வழிப்படுத்துவதற்காகவே தோற்றம்பெற்றன.
சுவாமிவிபுலாநந்தர் பிறந்த மண்ணில் பிறந்த நாங்கள் என்றும் ஏனையமதங்களை மதித்துநடப்பவர்கள். மனிதத்தை போற்றுபவர்கள். ,இனஜக்கியத்துடன் செயற்படுபவர்கள்.
இனமதம் கடந்து சேவையாற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம்வகிப்பவன் நான். இரு இனங்களுக்கும் தலைவனாக இருக்கின்ற நான் இறை தூதரைப்பற்றி விமர்சிப்பேனா? சாதாரண சிறு குழந்தைக்கும் இது விளங்கும்.
எனவே தயவுசெய்து யாரும் அரசியலுக்காக தெய்வங்களை இழுத்து விமர்சிப்பதை நிறுத்துங்கள். எங்களை என்னவேணுமென்றாலும் ஏசுங்கள் ,தூற்றுங்கள். ஆனால் இறைதூதரை இறைவனை கொச்சைப்படுத்தவேண்டாம்.