சம்மாந்துறை அன்சார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றான தடுப்பூசி செலுத்தும் பணியினை முன்னெடுத்து வரும் குவைத் அரசாங்கம் தற்போது குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின முன்னெடுத்து வருகின்றது.
இதன் முதற்கட்டமாக குவைத்தில் உள்ள வப்ரா (Wafra) பிரதேசத்தில் உள்ள தடுப்பூசி செலுத்தும் நிலையத்தில் தற்போது சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியுள்ள தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குவைத் வப்ரா (Wafra) பகுதியில் தற்போது கொரோனா தடுப்பூசியினைப் செலுத்திக் கொள்ள ஆயிரக் கணக்கான சட்டவிரோத தொழிலாளர்கள் கடும் வெயிலினையும் பொறுப்படுத்தாது ஒன்று கூடியுள்ளனர். இவர்களில் இந்தியா, இலங்கை, நேபாளம், பிலிபைன்ஸ், பங்களாதேஷ் போன்ற நாட்டவர்கள் அடங்குவர்.
குவைத்தில் உள்ள வப்ரா (Wafra) பிரதேசமானது நகரப்புறத்துக்கு அப்பால் உள்ள ஒரு பண்ணை மற்றும் விவசாயப் பிரதேசமாகவிருப்பதினால் அங்கு சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள தொழிலாளர்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருவதாகவும், கடும் வெயில் பிரதேசமான அப்பகுதியில் எந்தவித நிழலும் இல்லாத நிலையில் பலர் வெயிலில் வாடி மயங்கி விழுவதாகவும், தண்ணீர் போன்றவற்றினை பெற்றுக் கொள்ளும் வசதிவாய்ப்புக்களும் அங்கு இல்லாதிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குவைத்தில் உள்ள சில தொழிலாளர்களினால் பல்வேறு சமூக தொண்டு அமைப்புக்கள் குவைத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் போதும் அவர்களினால் இவ்வாறு வெயிலில் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கும் ஆண்-பெண் தொழிலாளர்களுக்கு தண்ணீர்-உணவு போன்ற எந்த உதவிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும், அவர்களிடமிருந்து உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.