(வி.ரி.சகாதேவராஜா)
எழுபது வருடகால வரலாற்றைக் கொண்ட மாகாணப் பாடசாலையான காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
'சுபீட்சத்தின்நோக்கு' திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதன் மூலம் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000ஆக உயர்த்தும் வேலைத்திட்டத்தின் கீழ் இப் பாடசாலையும் தரமுயர்த்தப்பட்டுள்ளது.
அதற்கான கடிதம் கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி பெரேராவின் ஒப்பத்துடன் தேசிய பாடசாலைகள் பிரிவு கல்விப்பணிப்பாளர் கித்சிறிலியனகமகே ஒப்பிமிட்டு வழங்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழு இணைப்புக் காரியாலயத்தில் வைத்து அதிபர் ம.சுந்தரராஜனிடம் அக்கடிதத்தை அபிவிருத்திக்குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வீரசிங்கவின் பிரதிநிதி நேற்று வழங்கிவைத்தார்.
இதே கடிதத்தை வழங்கிவைக்கும் மற்றுமொரு அரசியல் நிகழ்வு வெள்ளியன்று சாய்ந்தமருதில் நடைபெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.