Ads Area

20 க்கு ஆதரவளித்தவர்களை கட்சிப் பதவிகளிலிருந்து நீக்கக் கோரும் நிலையில் அவர்களுக்கு தலைவரினால் உயர் பதவிகள்.

20 க்கு ஆதரவளித்த எம்பிக்களை சாடிக்கொண்டு கட்சியின் உயர் பதவிகளில் ஒன்றான தேசிய அமைப்பாளரை குறிவைத்து காய் நகர்த்திய சகோ. தவம், சகோ. ஜெமீல், சகோ. ஆரிப் ஆகியோரின் முயற்சிகள் வீணாக்கப்பட்டு 20க்கு ஆதரவாக பலமாக கைகளை உயர்த்திய திருமலை மாவட்ட எம்.பியும் கட்சியின் முன்னாள் பிரதி தவிசாளருமான எம். எஸ். தௌஃபீக் அவர்களை தேசிய அமைப்பாளராக பதவியுயர்த்தி அரசியலில் சாணக்கியத்தன்மையும், அரசியல் முதிர்ச்சியும் கொண்ட ஒருவராக தன்னை இன்று வெளிக்காட்டியுள்ளார் மு.கா தலைவர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்கள்.

20க்கு ஆதரவளித்த பிரதித்தலைவர்களான ஹரீஸ், நஸீர் அஹமட், பொருளாளர் பைசால் காஸிம், பிரதி தவிசாளர் தௌஃபீக் ஆகியோரை கட்சி பதவிகளிலிருந்து நீக்க வேண்டும் என்று சகோ. தவம் போன்றோர்கள் போர்க்கொடி தூக்கிக்கொண்டு அலைந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் பிரதிதவிசாளராக இருந்த எம். எஸ். தௌஃபீக் அவர்களை தேசிய அமைப்பாளராக பதவி உயர்த்தி 20க்கு கையுயர்த்தியவர்களை பலப்படுத்தும் பணியை வெற்றிகரமாக செய்து தேசிய அரசியலில் எம்.பிக்களின் தேவைகளையும், அரசியல் போக்குகளையும்  பற்றி  மு.கா தலைமைத்துவம் சகோ. தவம் போன்றோருக்கு அரசியலின் அத்தியாயங்கள் சிலதை இன்றைய நியமனத்தினுடாக கற்பித்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

தேசிய அரசியலில் மக்கள் காங்கிரஸ் தலைவர் கடுமையான நெருக்குதல்களை அனுபவித்து வரும் இந்த காலகட்டத்தில் 20க்கு ஆதரவளித்து அரசுடன் நெருங்கிய உறவை கொண்டிருக்கும் தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு எதார்த்த அரசியலை செய்ய துணிந்திருக்கும் மு.கா தலைவரின் இந்த முயற்சி அரசியல் அரங்கிலும், மு.கா ஆதரவாளர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது எனலாம். 20கு கையுயர்த்திய இவர்களை பலப்படுத்தி சமூகத்தையும், கட்சியையும் பாதுகாக்கும் பணியை சிறப்பாக செய்துள்ளார் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள்.

இதனால் "இலவு காத்த" கிளியாக பெரும் ஆசை கொண்டிருந்த சிலர் மு.கா தலைவருக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்க தயாராகி இப்போது விமர்சனத்தின் முதல் பகுதியை ஆரம்பிக்கின்றனர் என்பது  இங்கு கவனிக்கப்பட வேண்டியது.  இலங்கை அரசியலின் போக்கை சரியாக கணித்து காய் நகர்த்திய 20க்கு ஆதரவளித்தவர்களின் பின்னணி என்ன? தலைமைத்துவ ஆளுமை என்ன? மு.கா பயணிக்கும் பாதையின் திசை என்ன என்பதை மு.காவுக்கு புதியவர்களான சகோ. தவம் போன்றோர்களை விட அடிப்படை போராளிகள் நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள் என்பதே இன்றைய சம்பவத்தின் நிழல் காட்டுகிறது. இனியென்ன அடுத்த அத்தியாயம் மு.கா தலைவர் ஹக்கீமை நோக்கி நகரும்.

கிழக்கு அரசியல் ஆய்வு மையம்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe