Ads Area

நற்பிட்டிமுனை-கிட்டங்கி பகுதியை இணைக்கும் பிரதான வீதியின் வீதிச்சமிஞ்சை, பாதசாரிக்கடவையின்றி மாணவர்கள் சிரமம் : விபத்துச்சம்பவமும் பதிவு.

 பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

வீதிச்சமிஞ்சைகள், பாதசாரி கடவையின்றி மாணவர்கள் சிரமப்படுவதுடன் விபத்துக்களும் அடிக்கடி ஏற்படுகின்ற சம்பவம் பதிவாகியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை-கிட்டங்கி பகுதியை இணைக்கும் பிரதான வீதியின் இரு மருங்கிலும் விழிப்பூட்டும் சமிஞ்சைகள் மற்றும் பாதசாரிக் கடவைகள் இன்மையினால் வீதியில் பயணஞ்செய்யும் மாணவர்கள், பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதனால் இப்பிரதேசத்தில் அதிகரித்துள்ள விபத்துக்கள், வாகனங்கள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்குமுகமாகவும் பாதசாரிகளின் நலன்கருதியும் உரிய வீதிச்சமிஞ்சைகள், பாதசாரி கடவைகளை நிர்மாணிப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்படுகின்றனர்.

நற்பிட்டிமுனை அல்-அக்ஸா பாடசாலை லாபீர் வித்தியாலயம் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் செல்கின்ற மாணவர்கள் பிரதான வீதியைக் கடக்கின்ற போது இவ்வாறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கு அறிவித்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கிட்டங்கி-நற்பிட்டிமுனை பகுதியிலுள்ள வீதிச்சமிஞ்சைகள் அழிவடைந்து காணப்படுவதுடன், புனரமைப்புச் செய்யப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், வீதியின் இருமருங்கிலுமுள்ள வடிகான்களுக்கு மேலாக இடப்படும் கொங்கிரீட் மூடிகள் முறையாக போடப்படாமையினால் விபத்துக்களும் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன.

எனவே, இப்பிரதேசத்தில் அதிகரித்துள்ள விபத்துக்கள், வாகனப்போக்குவரத்து நெரிசலைக் குறைக்குமுகமாகவும் பாதசாரிகளின் நலன்கருதியும் இந்நடவடிக்கை துரித கதியில் முன்னெடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தற்போதைய கொரோனா 3 அனர்த்த  அச்சுறுத்தல்  நிலையிலும் கூட வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இவ்வாறான செயற்பாட்டினை ஏனைய பகுதிகளில்  தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அசாதாரண சூழ்நிலை காரணமாக வீதியோரங்களில் வளர்ந்திருந்த பாரிய மரக்கிளைகள் வெட்டப்பட்டு வருகின்றன.

மக்களின் பாதுகாப்புக்கருதி குறித்த வேலைத்திட்டத்தினை வீதி அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, சம்மாந்துறை, நிந்தவூர் பகுதிகளில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர்  வீதிகளைச்சுத்தப்படுத்துவதுடன், வீதிப் போக்குவரத்திற்குத் தடையாகவுள்ள பாரிய மரக் கிளைகளை வெட்டி அகற்றி வருகின்றனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe