பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்களின் காத்திரமான களமாடலின் விளைவாக, பொத்துவில் ஆதார வைத்தியசாலையை மாவட்ட பொது வைத்தியசாலையாக தரமுயர்த்துவதன் ஓரங்கமாக ‘Type A’ ஆக தரமுயர்த்தப்பட்டது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன அவர்களினால், பொத்துவில் ஆதார வைத்தியசாலை Type B இலிருந்து Type A இற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கின்ற சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
தசாப்தங்களாக பொத்துவில் மக்கள் விரைவானதும் தரமானதுமான சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்வதில் பல இன்னல்களை எதிர்நோக்கி வந்தனர். பொத்துவில் ஆதார வைத்தியசாலை தரமுயர்த்தப்படாமல் இருந்தது இதற்கு பிரதான காரணமாயிருந்தது.
இது குறித்து முன்னர் பல தடவைகள் அதிகாரங்களில் இருந்த அரசியல்வாதிகளிடம் எடுத்துக்கூறியும் எந்த முயற்சியும் செய்யாமல் அசமந்தமாக இருந்ததாக மக்கள் அங்கலாய்ப்பில் இருந்தனர்.
ஆனால் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதில் இருந்து, இது குறித்து வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ILM றிபாஸ் அவர்களின் ஒத்துழைப்போடு காத்திரமாக முயற்சி செய்தார்.
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையை மாவட்ட பொது வைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டும் என பா.உ. SMM முஷாரப் அவர்கள் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்து தீர்மானம் நிறைவேற்ற கோரியதற்கிணங்க, கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ச்சியாக சுகாதார அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் உள்ளிட்டோரின் சம்மதங்களை பெற்று மாவட்ட பொது வைத்தியசாலையாக தரமுயர்த்துவதன் முதற்படியாக ‘TYPE B’ இலிருந்து ‘TYPE A’ ஆக பொத்துவில் ஆதார வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டிருந்தது. அதற்கான சுற்றுநிருபமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பணி வெற்றிகரமாக நிகழ்வதற்கு ஒத்துழைப்பு நல்கிய வைத்தியசாலை அத்தியட்சகர் ILM றிபாஸ், சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளர், கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர், ஆளுநரின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்கள் உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறார்.
போதிய சுகாதார வசதிகளின்றி தசாப்தங்களாய் தவிக்கும் பொத்துவில் மக்கள், இத்துணை காலமாக எந்த முயற்சியும் செய்யப்படாத அரசியல்வாதிகளை விடுத்து மக்கள் பணியில் கரிசணையோடு இயங்கும் பா.உ. SMM முஷாரப் அவர்களுக்கு மனது நிறைந்த நன்றிகளை தெரிவிக்கின்றனர்.