Ads Area

குழந்தை இல்லாத தம்பதியினருக்கு பரிகார பூஜை செய்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான நகை கொள்ளை : போலி பெண் பூசாரி கைது.

 பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

தாலிக்கொடி, தங்கசங்கிலி உட்பட சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஏழே கால் பவுண் தங்க நகை கொள்ளை தொடர்பில் கைதாகிய பெண் பூசாரி தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை (7) பல வருடமாக குழந்தை இல்லாத தம்பதியினர் பரிகார பூஜையொன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். 

இதன் போது, பூசாரி போன்று வேடமிட்டுச் சென்ற பெண் சந்தேக நபர் பூஜை செய்வது போன்று பாவனை செய்து அவ்வீட்டிலிருந்த அலுமாரியில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்த   தாலிக்கொடி தங்கச்சங்கிலி உட்பட  சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஏழே கால் பவுண் தங்க நகைகளைக் களவாடிச் சென்றிருந்தார் என பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய குறித்த தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றதாகச் சந்தேகிக்கப்பட்ட  பெண் சந்தேக நபரையும் அவரது 20 வயது மதிக்கத்தக்க ஆண் நண்பரையும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துமிந்த நயனசிறியின் வழிகாட்டலுக்கமைய     குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி    உப பொலிஸ் பரிசோதகர் வை.விஜயராஜா தலைமையிலான பொலிஸ் சார்ஜன்ட் அமித ரத்னாயக்க பொலிஸ் உத்தியோகத்தர்களான நியாஸ், அருண் ஆகியோர் கடந்த  வெள்ளிக்கிழமை (10) இரகசிய தகவலொன்றினை அடிப்படையாகக் கொண்டு கைது செய்திருந்தனர்.

குறித்த களவாடப்பட்ட வீட்டுரிமையாளர் தமது வீட்டைக் காவல் செய்வதற்கான சடங்கு (பரிகார)  பூஜையொன்றைச் செய்வதற்காக சம்பவ தினமான  கடந்த 7ம் திகதி புதன்கிழமை  கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச்சேர்ந்த பெண் பூசாரியான சந்தேக நபரை வரவழைத்துள்ளார்.

அவ்வாறு வரவழைக்கப்பட்ட அந்த பெண் பூசாரி குறித்த களவாடப்பட்ட வீட்டில் அன்றிரவு தங்க வைக்கப்பட்டு  பூஜை  நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் மறுநாள் அதிகாலை அப்பெண் பூசாரி அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் பூஜை நிறைவடைந்த பின்னர் வீட்டின் அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஆறு பவுண் நிறை கொண்ட தாலிக்கொடி ஒரு பவுண் நிறை கொண்ட தங்க சங்கிலி கால் நிறை பவுண் கொண்ட மோதிரம் காணாமல் போயிருந்ததை அறிந்த வீட்டுரிமையாளர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இம்முறைப்பாட்டிற்கமைய பொலிசார் விசாரணையை மேற்கொண்ட நிலையில், கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் பூசாரியைக் கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் விசாரணையின் போது களவாடப்பட்ட தங்க ஆபரணங்கள் தனியார் அடகு நிறுவனமொன்றில் ஈடு செய்யப்பட்டிருந்ததுடன், ஏனைய நகைகள்  தங்க நகைகடைகளில் விற்கப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கபப்டது.

இதேவேளை, கொள்ளைச்சம்பவத்தில் கைதாகிய பெண் பூசாரி சந்தேக நபர் கொக்கட்டிச்சோலை, களுவாஞ்சிக்குடி, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையங்களில் திருட்டுச்சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன், வழக்கு தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் கைதான பெண் சந்தேக நபரும் அவரது ஆண் நண்பரையும் மட்டக்களப்பு நீதிவான்  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும், குறித்த பெண்  தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருப்பின்  பொலிஸ் நிலையத்தினைத் தொடர்பு கொள்ளுமாறு  பொலிஸார் கேட்டுள்ளனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe