பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
அரச ஊழியர்களின் சம்பளமானது, அடுத்த ஆண்டிற்குள் 18 ஆயிரம் ரூபாயினால் அதிகரிக்கப்படாவிடின், நாடு தழுவிய ரீதியில் பாரிய தொழிற்சங்க போராட்டத்திற்குத் தயாராக இருக்கின்றோம் என ஒன்றிணைந்த இலங்கை அரச சேவைகள் தொழிற்சங்க கூட்டு சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அரச சேவையாளர்களின் சம்பளத்தை 18 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்குமாறு கோரி ஒன்றிணைந்த இலங்கை அரச சேவைகள் தொழிற்சங்க கூட்டு சம்மேளனம் ஞாயிற்றுக்கிழமை (12) மாலை நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பு அம்பாறை மாவட்டம் கல்முனையிலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
மேலும் அங்கு கருத்து தெரிவித்ததாவது,
அரசு சேவையாளர்களின் மாதாந்தச் சம்பளத்தை 18 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும்.
தற்போது நாட்டிலுள்ள அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் மிக அதிகளவில் உயர்ந்துள்ளன. எரிபொருள் விலை உயர்ந்து, போக்குவரத்துச்செலவு அதிகரித்து விட்டது.
கேஸ் விலை, மாவிலை, அரிசி விலை என்பன உயர்ந்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.
மருந்துப்பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்து விட்டன. அனைத்தினதும் விலைகள் உச்சத்திற்குச் சென்றுள்ளன. விலையேற்றங்களைக் கணிப்பீடு செய்கையில் நான்கு அல்லது ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குடும்பமொன்றின் வாழ்க்கைச்செலவு மாதமொன்றிற்கு ரூபா 25,000 இலும் கூடுதலாக அதிகரித்துள்ளதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
நாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடி பற்றி ஊடகங்கள் வாயிலாக நாங்கள் அறியக்கூடியதாகவுள்ளது. அதேவேளை, அரச சேவையாளர்கள் வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதென்பது மிகவும் கஷ்டமாகவும் இடர்பாடாகவும் உள்ளது.
அரசிடமிருந்து சம்பள அதிகரிப்பைப் பெற்றுக் கொள்வதைத் தவிர, வேறெந்த மார்க்கமும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இல்லாதிருப்பதையும் தாங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று திடமாக நம்புகின்றோம்.
எனவே, தயவு செய்து அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் ரூபா 18,000 இற்கு குறையாத சம்பள அதிகரிப்பினை 2022.01.01 இலிருந்து வழங்குவதற்கு ஆவண செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கின்றோம்.
குறித்த எமது கோரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்படாத பட்சத்தில் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நாடு பூராகவுமுள்ள ஒன்றிணைந்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து பாரியளவிலான கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துவதற்கு நாம் பின் நிற்கப்போவதில்லை என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இங்கு குறிப்பிட்டனர்.
மேற்படி ஒன்றிணைந்த இலங்கை அரச சேவையாளர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், தொழிற்சங்கம், இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கம், வடக்கு கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம், கிழக்கு மாகாண சமூக சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம், கிழக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்கள் தொழிற் சங்கம், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.