பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்திச்சென்றவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவமானது திங்கட்கிழமை (20) இரவு காத்தான்குடி மத்திய மகா வித்தியாலத்தின் பின்னாலுள்ள கர்பலா வீதியில் இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற குறித்த தகவலுக்கமைய விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரையில் வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர்.சேனாதீரவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் நளீன் பெரேராவின் ஆலோசனைக்கமைய களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படைப் பொறுப்பதிகாரி எச்.எம்.எம்.பிரேமரத்னவின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் ரி.எம்.எம்.யு.கே.வி.தென்னகோன் தலைமையிலான விசேட அதிரடிப்படை குழுவினர் தேடுதலை மேற்கொண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றினூடாக ஐஸ் போதைப்பொருள் கடத்திய சந்தேக நபரையும் 64.286 மில்லி கிராம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மற்றும் பக்கையும் கைப்பற்றினர்.
இதன் போது குறித்த போதைப்பொருளைக் கடத்திய காத்தான்குடி-6 ஆம், பிரிவினைச்சேர்ந்த சந்தேக நபரான 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தரான வுஹார்தீன் நசீர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் யாவும் காத்தான்குடி பொலிஸரிடம் சட்ட நடவடிக்கைக்காக விசேட அதிரடிப்படையினரால் பாராப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்களுடன் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த காத்தான்குடி பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இச்சோதனை நடவடிக்கையில் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை படையணியின் தலைமையதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி.எம்.எம்.யு.கே.வி.தென்னகோன் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் பண்டார விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்களான அமில (40363), ஆரியரத்ன (22207), ஜானக (38291), ஜயவீர (93185), கந்தேகம (96717), சாரதி மதுசங்க (90612) உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துச் செல்வதைத் தடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினரின் ரோந்து சேவை படைபிரிவு பல்வேறு தகவல்களைத்திரட்டி சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றது.