(றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்)
பொருளாதாரம் நல்லாட்சியில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்கேற்பு' என்ற தொனிப்பொருளில் இன நல்லுறவிற்கான சந்தை நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் அவர்களினால் இன்று (29) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
பிரதேசத்தில் இளைஞர்கள், பெண்கள், தொழில் முயற்சியாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக அவர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்தும் முகமாக இவ்விற்பனை சந்தை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
தமிழ், முஸ்லிம் பயனாளிகள் 48 பேருக்காக தலா 85,000 ரூபா பெறுமதியான உள்ளீட்டு உபகரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் 11 குழுக்களுக்கான 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான உள்ளீடுகளை வழங்கி இவர்களின் தொழில் முயற்சி மேப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
15 வகையான உள்ளுர் உற்பத்தி பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டன. இதில் தைத்த ஆடைகள், உணவுப் பொருட்கள், மரக்கறி வகைகள், தானியப் பொருட்கள், தேன் என பல்வேறு வகையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இதற்கான நிதி அனுசரனையை மட்டக்களப்பு அரச சார்பற்ற பெரேண்டினா அபிவிருத்தி சேவை நிறுவனம் வழங்கியுள்ளது.
மேற்படி நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திரு.பிரணவரூபன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி இ.லதாகரன், கிராம நிருவாக உத்தியோகத்தர் மனோஜ், பிளேன் இன்டர்நெட்டில் நிறுவனத்தின் ஆலோசகர்களில் ஒருவரான கலீல் கபூர், பெரேண்டினா நிறுவன திட்ட முகாமையாளர் எஸ்.சிவராஜா, கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு உத்தியோகத்தர் திருமதி சுபாஜினி ராஜன், திட்ட இணைப்பாளர் இ.இதயகுமார், சமூக வலுவூட்டளார்கள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.