பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
நீதியமைச்சின் கீழுயங்கி வருகின்ற மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் மத்தியஸ்த சபை பற்றிய கிராம மட்ட விழிப்புணர்வுக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்படி மத்தியஸ்த சபை பற்றிய கிராம மட்ட விழிப்புணர்வுக் கலந்துரையாடலானது இன்று (7) செவ்வாய்க்கிழமை நீதியமைச்சின் கீழியங்கி வருகின்ற மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் கல்முனை வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.இராஜ்குமாரின் ஏற்பாட்டில் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
இதன் போது, மத்தியஸ்த சபை பற்றிய விழிப்புணர்வு மற்றும் மத்தியஸ்த சபை செயற்பாடுகள், பிணக்குகளை எவ்வாறு ஆற்றுப்படுத்துதல் போன்றவை பாண்டிருப்பு-02 கிராம சேவகர் பிரிவு மக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
குறித்த விழிப்புணர்வுக் கலந்துரையாடலில் கல்முனை மத்தியஸ்த சபைத்தவிசாளர் இ.சந்திரசேகரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மக்களுக்கு பல்வேறு தெளிவூட்டல்களை வழங்கினார்.