தனது பேரப்பிள்ளைகள் ஒன்றறை நாட்களாக பட்டினியில் கிடப்பதாகவும் எனவே அவர்களை தொடர்ந்து பராமரிக்க முடியாது என்பதால் அவர்களை சிறுவர் இல்லத்தில் விடுமாறும் கோரி, 70 வயது பெண்ணொருவர், மாத்தறை பொலிஸ் பிரிவுக்கான சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் உதவியை நாடிய சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாத்தறை மிதிகம துர்கி பிரதேசத்தில் 70 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவர் 7 மற்றும் 11 வயதுடைய தனது பேரப்பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார்.
வறுமைக் காரணமாக தனது பேரப்பிள்ளைகள் இறுதியாக கடந்த 20ஆம் திகதியே உணவு உண்டனர் என்று அவர் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.
20ஆம் திகதி இரவு சோறு மற்றும் பருப்பை எனது பேரப்பிள்ளைகள் உட்கொண்டனர்.
அதன் பின்பு அவர்களுக்கு உணவை சமைத்துக்கொடுப்பதற்கு வீட்டில் எந்த உணவுப் பொருட்களும் இல்லை.
பிள்ளைகள் பசியால் அழுவதை பார்க்க முடியாது அருகிலுள்ள கடைக்கு சென்று 500 ரூபாயை கடனுக்கு பெற்று பட்டர் பிஸ்கட்டுகளை பேரப்பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்தேன்.
அந்த பட்டர் பிஸ்கட்டுகளை உண்டே எனது பேரப் பிள்ளைகள் ஒரு நாளை கழித்தனர்.
அவர்கள் தொடர்ந்து பட்டினியில் வாடுவதை என்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்று அவர் மாத்தறை பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி வருணி கேஸலாவுக்கு தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டறிந்துகொண்ட பொறுப்பதிகாரி வருணி கேஸலா, உடனடியாக அந்த வயோதிபப் பெண்ணுக்கும் சிறுமிகள் இருவருக்கும் காலை உணவுப் பொதியை வாங்கிக் கொடுத்துள்ளார்.
பெற்றோரின் அரவணைப்பின்றி சிறுமிகள் தன்னுடனேயே வசித்து வருகின்றனர் என்றும் பெற்றோர் அவ்வப்போது அனுப்பும் பணத்தில் சிறுமிகளுக்கு உணவை பெற்றுக்கொடுப்பதாகவும் குறித்த வயோதிபப் பெண் தெரிவித்துள்ளார்.
அயலவர்களின் உதவியுடனே சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவை நாடியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் சமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தேன். எனினும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்குப் பின் என்னை அவர்கள் பணிக்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டார்கள்.
சிறுமிகள் தந்தை இருந்திருந்து எப்போதாவது பணம் அனுப்புவார். தாயும் அதுபோன்றே செயற்படுகிறார். அவர்களில் இருவரும் வேறு திருமணங்கள் செய்துகொண்டு மேலும் இரு பிள்ளைகளை பெற்று வளர்க்கின்றனர்.
மிகவும் கடினமான நிலையிலேயே நாம் வாழ்ந்து வருகின்றோம்.
தற்போதைய நிலையில் சமைப்பதற்கு வீட்டில் ஒரு உணவுப்பொருட்கள் கூட இல்லை. சிறிதளவு அரிசி மட்டுமே உள்ளது. கடைகளிலும் கடனுக்கு எமக்கு பொருட்களை வழங்குவதில்லை. ஏலாத பட்சத்திலேயே பட்டர் பிஸ்கட்டை வாங்கி எனது பேரப்பிள்ளைகளுக்குக் கொடுத்தேன்.
தற்போது இருக்கும் சூழ்நிலையில் எனது பேரப்பிள்ளைகளை என்னால் தொடர்ந்து வளர்க்க முடியாது. எனது பேரப்பிள்ளைகள் என்னைவிட்டு சிறுவர் இல்லத்துக்கு செல்ல விரும்பவில்லை. எனினும் செய்வதற்கு வழியில்லை. தற்போது எங்கள் மூவருக்கும் மரணிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
இந்நிலையில் பிரதான பொலிஸ் பரிசோதகர் வருனி போகஹவத்த உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் குறித்த மூவருக்கும் தேவையான உணவுப் பொருட்களை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
சிறுமிகளின் பெற்றோரை விசாரணைக்கு அழைத்துள்ள அவர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Thanks - http://www.battinews.com/