எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் முப்பது இலட்சம் ரூபா மதிக்கத்தக்க அபின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரவின் வழிகாட்டலில் குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஈ.ஏ.டபள்யூ.எஸ்.எதிரிசிங்க தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜே.பகீர்தரன், விக்ரம சேகர, எஸ்.பண்டார ஆகியோகர் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அபின் போதைப்பொருளும் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டள்ளனர்.
வாழைச்சேனை அல் அக்ஷா வீதியில் சந்தேக நபரின் சகோதரியின் வீட்டினைச்சுற்றி வளைத்த போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 கிராம் அபின் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி புகையிரத நிலைய வீதியைச்சேர்ந்த் 39 வயதுடைய குடும்பஸ்தரொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் தொடர்புடைய வியாபாரிகள் வேறு யாராவது இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதுடன், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் பாவனையை இல்லாமல் செய்வதற்கு பொலிஸாருடன் இணைந்து வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து செயற்பட்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.