Ads Area

தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 14வது பொதுப்பட்டமளிப்பு விழா பெப்ரவரி 07ல் ஆரம்பம்.

 பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதினான்காவது பொதுப்பட்டமளிப்பு விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ம் திகதி முதல் 10ம் திகதி வரை நடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இப்பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இம்முறை பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் நான்கு நாட்களுக்கு ஐந்து அமர்வுகளாக நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளன.

முதல் அமர்வில் பிரயோக விஞ்ஞானங்கள், பொறியியல் பீடங்களைச்சேர்ந்த 474 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. 

இரண்டாம் நாள் அமர்வில் கலை, கலாசார பீடத்தினைச்சேர்ந்த 566 மாணவர்களும் மூன்றாம் நாள் அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபுமொழி பீடத்தினைச்சேர்ந்த 642 மாணவர்களும் தமது பட்டங்களைப் பெறவுள்ளனர்.

நான்காவது அமர்வில் முகாமைத்துவ, வர்த்தக பீடத்தினைச்சேர்ந்த 619 மாணவர்களுக்கும் ஐந்தாவது அமர்வில் கலை கலாசார, முகாமைத்துவ - வர்த்தக பீடங்களில் இணைந்து கல்வி கற்ற 312 வெளிவாரி மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதே நேரம், வியாபார நிருவாகம், முகாமைத்துவம், தமிழ் உள்ளிட்ட துறைகளில் பட்டப்பின்படிப்புக்களை நிறைவு செய்த மாணவர்களுக்கான முதுமாணி, முதுத்தத்துவமாணி பட்டங்கள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

நாட்டில் நிலவுகின்ற கொவிட்-19 அசாதாரண சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு, பட்டமளிப்பு விழா நிகழ்வுகளை சுகாதார வழிகாட்டலுக்கமைய நடத்துவதற்கு பல்கலைக்கழக நிருவாகம் தீர்மானித்துள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe