Ads Area

தேனி அருகே சாதிய தாக்குதல்களில் இருந்து மீள்வதற்காக 8 குடும்பங்களைச் சேர்ந்த தலித் சமுதாயத்தினர் 40 பேர் இஸ்லாத்தை தழுவிக் கொண்டனர்.

தேனி அருகே சாதிய தாக்குதல்களில் இருந்து மீள்வதற்காக 8 குடும்பங்களைச் சேர்ந்த தலித் சமுதாயத்தினர் 40 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலித்களாக இருப்பதால் சுயமரியாதை கிடைப்பதில்லை எனக் கூறி கடந்தாண்டு கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் உள்ள தலித் சமுதாயத்தினர் இஸ்லாம் மதத்தை தழுவினர். மாநிலம் முழுவதும் பெரும் பேசு பொருளான இச்சம்பவத்தைப் போல தேனியிலும் தற்போது தலித் சமுதாயத்தினர் 40பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.‌

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது டொம்புச்சேரி கிராமம்.‌ பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் அப்பகுதியில் தலித் சமுதாயத்தினரும் ஏறக்குறைய நூற்றுக்கணக்கானோர் வசிக்கின்றனர். இந்நிலையில் சாதிய வன்கொடுமைகளால் நிகழும் தாக்குதலில் இருந்து மீள்வதற்காக  டொம்புச்சேரி கிராமத்தில் வசிக்கும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த  8 குடும்பங்களில் உள்ள ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 40பேர் அன்மையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர்.

இது குறித்து மதம் மாறிய நபர்கள் கூறுகையில், கடந்த 2021ஆம் ஆண்டு தீபாவளியன்று தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வந்த பிற சமுதாயத்தினர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலருக்கும் காயம் ஏற்பட்டதோடு தங்கள் உடைமைகளும் சேதமடைந்தது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது வரை விசாரணை நடைபெற்று வருகிறது.‌ தொடர்ந்து இப்பகுதியில் நிகழும் மோதல் சம்பவம், குறிப்பாக தலித்களாக இருப்பதாலே தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலில் இருந்து மீள்வதற்காகவே இந்த மதமாற்றம். இது எங்கள் சுய விருப்பத்தின் பேரில், இஷ்டப்பட்டுத் தான் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாகக் தெரிவித்தார் முகம்மது இஸ்மாயிலாக மாறிய கலைக்கண்ணன்.

இந்து தலித்தாக இருந்த போது குறிப்பிட்ட கோவில்களுக்கு எங்களால் செல்ல முடியாது. ஆனால் இஸ்லாமியராக மாறிய பின்பு, எந்த பள்ளிவாசலுக்கும் சென்று எங்களால் இறை வணக்கம் செலுத்த முடிகிறது. கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட இரட்டைக் குவளை முறை தற்போதும் சில இடங்களில் கடைபிடிக்கப்படுகிறது.‌ இதை விட கொடுமையானது தலித்களாக இருப்பதால் முடி திருத்தம் செய்ய மறுக்கப்படுகிறது. இதற்காக அருகில் உள்ள நகரங்களுக்கு சென்று முடித்திருத்தம் செய்து கொள்ளும் சூழலில் வாழ்ந்து வந்தோம்.‌

மேலும் அடிக்கடி நிகழும் தாக்குதலுக்கு பள்ளி செல்லும் தலித் மாணவர்களும் தப்புவதில்லை. இதனால் அவர்கள் மீதும் வழக்குப் பதிவு ஏற்படுவதால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிப்படைகிறது. தொடர்ந்து சிறு வயதில் இருந்தே அனுபவித்து வந்த இது போன்ற சாதிய வன்கொடுமைகளில் இருந்து மீளவே இந்த இஸ்லாம் மதமாற்றம் என்கிறார் முகம்மது அலி ஜின்னாவாக மாறிய வைரமுத்து.

கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு பயந்து காடு ஆறு மாதம், வீடு ஆறு மாதம் என வாழ்ந்து வருகிறோம். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதோடு, குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்வது கேள்விக்குறியானது. இது போன்ற துயரங்களில் இருந்து விடுபடவே குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து இஸ்லாம் மதத்தை விரும்பி ஏற்றுக் கொண்டோம். இஸ்லாமியராக மாறிய பின் வெளியூர்களில் தங்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதாகவும், உள்ளூரிலும் விரைவில் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறுகிறார் யாசர் அராபத்-தாக மாறிய வீரமணி.

ஆசை வார்த்தைகள் கூறியோ, கட்டாயப்படுத்தியோ இங்குள்ள தலித்களை நாங்கள் கட்டாய மதமாற்றம் செய்யவில்லை.‌  தீண்டாமை கொடுமையில் இருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் தான், அவர்களாக தாமாக முன்வந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.‌ விரும்பி வந்தவர்களை நாங்கள் இன்முகத்துடன் வரவேற்று  அரவணைத்துக் கொண்டோம். பாகுபாடின்றி ஒரு இஸ்லாமியருக்கு சமூகத்தில் கிடைக்கும் அனைத்து உரிமைகளும், மரியாதைகளும் இவர்களுக்கும் கிடைத்துள்ளதாகக் கூறுகிறார் மௌலவி கலீல் அகமது ஷலாபி.

வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்த நாட்டில் ஏற்றத்தாழ்வுகளின்றி அனைத்து தரப்பு மக்களையும் சகோதரத்துடன் நேசிக்கும் சூழல் உருவாக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

நன்றி - https://tamil.news18.com/



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe