பாரிய சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு : மக்கள் அவதி
பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
நாடளாவிய ரீதியில் மீண்டும் பாரிய சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு நிலவுகிறமையினால் அம்பாறை மாவட்டத்தில் அதன் தாக்கத்தை அவதானிக்க முடிகின்றது.
கடந்த 4 நாட்களுக்கும் மேலாக அம்மாவட்டத்திலுள்ள பல்வேறு விற்பனை முகவர்களிடமிருந்து எரிவாயு சிலிண்டர்களை நுகர்வோர்கள் பெற முடியாமல் சிரமப்படுவதைக் காண முடிகின்றது.
மேலும், எந்தவொரு சமயல் எரிவாயு சிலிண்டர்களும் சில தினங்கள் விநியோகப்படாமையினால் பல பகுதிகளிலும் சமயல் எரிவாயுத் தட்டுப்பாடு உணரப்பட்டுள்ளது.
இது தவிர, வைத்தியசாலைகள், இராணுவ முகாம்கள், தகனசாலைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள், பேக்கரிகள் ஆகியவற்றுக்கும் கையிறுப்பிலிருந்த எரிவாயுகள் கட்டுப்பாடுகளுடன் விநியோகம் செய்யப்பட்டு வந்தன.
தற்போது எரிவாயு முடிவடைந்துள்ளதுடன், கையிருப்பில் களஞ்சியப்படுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் முடிவடைந்தமையினால் பெரும் சிரமங்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனால் பல உணவங்கள், சுமார் 100 க்கும் அதிகமான பேக்கரிகள் சமயல் எரிவாயுத் தட்டுப்பாடு காரணமாக கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளன.
பல உணவகங்களில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. வீடுகளிலும் சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.