பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக கரையோரப் பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழ விற்பனை அதிகரித்துள்ளன.
குறிப்பாக, சம்மாந்துறை-அம்பாறை பிரதான வீதி, கல்முனை-அக்கரைப்பற்று பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் இவ்வெள்ளரிப்பழக் கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இம்மாவட்டத்தில் தற்போது நிலவி வருகின்ற வரட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள உடல் ஊஸ்ணத்தைத் தவிர்ப்பதற்காக இவ்வெள்ளரிப்பழம் உட்பட ஏனைய பழ வகைகளைச் சாப்பிடுவதில் மக்கள் அதிக நாட்டம் கொண்டு வருகின்றனர்.
இது தவிர, தற்போது அதிக வெப்பங்காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழத்திற்க்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன், 150 ரூபாய் முதல் சுமார் 350 ரூபாய் வரை இவ்வெள்ளரிப்பழம் சிறியது முதல் பெரியது வரையான பருமனுக்கேற்ப விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மேற்குறித்த இப்பழ வகையானது, பெரும்பாலும் வெப்பமான காலங்களிலேயே அதிகமாக அறுவடை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம், செங்கலடி, களுதாவளை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பெருமளவில் வெள்ளரிப்பயிர்ச்செய்கை பண்ணப்பட்டு வருவதுடன், இவைகள் ஏனைய பிரதேசங்களுக்கு விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படுகின்றது.