(காரைதீவு சகா)
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைக்கான உழவு வேலைகள் ஆம்பமாகியுள்ளன. அதேவேளை அதற்கான செலவுகளும் பாரிய அளவில் அதிகரித்துள்ளன.
உழவு வேலைக்கென எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கமைவாக பிரத்தியேக வரிசையில் வைத்து மட்டுப் படுத்தப்பட்டஅளவில் டீசல் நிரப்பப்படுகின்றன.
அதேவேளை உழவு வேலைகளுக்கான கூலிகளும் பரவலாக அதிகரித்துள்ளன. ஒரு ஏக்கர் உழவுவதற்கு உழவு இயந்திரத்திற்கான கூலி 6000 ரூபாவிலிருந்து 12000 ரூபாவாக அதிகரித்துள்ளது. 1 லீற்றர் டீசல் 340 ரூபாவாக அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணம். பல உழவு இயந்திரகாரர்கள் டீசல் பிரச்சினையால் உழவ முடியாது என்கிறார்கள். அதனால் இன்னும் உழவமுடியாது பல விவசாயிகள் திண்டாட்டத்திலுள்ளனர்.
மேலும் விதைப்பதற்கான கூலி 1500 ரூபாவிலிருந்து 2000 ரூபாவாக அதிகரித்துள்ள அதேவேளை வரம்பு கட்டுவதற்கான கூலி 2000 ரூபாவிலிருந்து 2500 ரூபாவாக அதிகரித்துள்ளது.
1புசல் விதைநெல்லுக்கு 1000 ரூபாவால் கூடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த தடவையைப்போல இரசாயனப்பசளை இம்முறையும் கிடைக்கவில்லை. எனினும் கடந்த தடவை கள்ளச்சந்தையில் 1மூடை யூரியா 35 ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்டது. யூரியா இட்டு நெற் செய்கையீலீடுபட்டவர்களுக்கு விளைச்சல் அதிகமாகவிருந்தது. கூடவே நெல்லின் விலையும் அதிகரித்தமையினால் கூடிய இலாபம் பெற்றனர். ஆனால் யூரியா இம்முறை 50 ஆயிரம் ரூபா வரை செல்கிறது. அதற்கும் யூரியா இல்லையென பழக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.