ஆளும் அரசாங்கத்திற்கு இதுவரை நான் கொடுத்து வந்த ஆதரவினை விலக்கிக் கொள்கிறேன் என முஸ்லிம் காங்ரஸ் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் தனது உத்தியோகபூர்வ முகநுாலில் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட பிரேரணைகளில் கீழ் குறிப்பிடப்படுகின்றவைகளுக்கு மாத்திரம்தான் நான் ஆதரவை வழங்கியிருந்தேன்.
1. 20வது அரசியலமைப்புத் திருத்தம்
2. கௌரவ பெசில் ராஜபக்ஷ அவர்களினால் கொண்டுவரப்பட்ட நிதி சம்மந்தப்பட்ட ஒரு பிரேரணை
3. 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் வாக்கெடுப்பு
ஆனால் இனிவரும் காலங்களில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படுகின்ற எந்த பிரேரணைக்கும் ஆதரவாக வாக்களிப்பதில்லை என்று தீர்மானித்துள்ளேன். எனது கட்சியின் தீரமானத்திற்கு கட்டுப்பட்டதுடன் நாட்டில் ஏற்பட்டிருக்கும் விலையேற்றம், எரிபொருள் இல்லாமை, எரிவாயு இல்லாமை, மருந்துகள் தட்டுப்பாடு, அத்தியாவசிப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் பல காரணங்களுக்காக இத்தீர்மானத்தினை எடுத்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.