சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற குழுக்களின் ஊடாக அரசாங்கத்தில் பங்கு வகிக்க தயாராக இருப்பதாக அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது,
“நாங்கள் பாராளுமன்ற குழுக்களின் மூலம் அரசாங்கத்தில் பங்கு வகிக்கத் தயாராக உள்ளோம், ஆனால் அமைச்சுப் பதவிகளை ஏற்க விரும்பவில்லை. அரசாங்கத்தில் பங்கு வகிப்பதற்கான சரியான வழி, பாராளுமன்றக் குழுக்களில் பங்கேற்பதே தவிர, அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டு அவற்றுடன் வரும் சலுகைகளை அனுபவிப்பதில் இல்லை என சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.
சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய அமைப்புகள் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பொதுவான வேலைத்திட்டம் தொடர்பில் புரிந்துணர்வுக்கு வரவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய சிவில் அமைப்புக்களை ஒன்றிணைத்து தேசிய சபையொன்றை அமைக்கவுள்ளதாக திரு. பிரேமதாச தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சபை செயல்படும் எனவும் தெரிவித்தார்.
தேசிய சபையில் முன்வைக்கப்படும் அனைத்து முற்போக்கான முன்மொழிவுகளும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.