ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவேட்டை ஒழுங்குபடுத்தும் ஆணையின் எண் 10-2022 இன் கீழ் புதிய கூட்டாட்சி சட்டத்தை அமீரக ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் வெளியிட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய சட்டத்தை தொடர்ந்து, இனி தந்தை தெரியாத குழந்தைகளுக்கும் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த சட்டம், பெற்றோரின் திருமண நிலை மற்றும் தந்தை தெரிந்தவரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் குழந்தைகள் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான உரிமையை அங்கீகரிக்கிறது.
இதன் மூலம் தாய்மார்கள் இப்போது குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கு தங்கள் ஆவணங்களை நீதித்துறை அதிகாரிகளிடம் (judicial authorities) சமர்ப்பித்து பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சட்ட நிபுணர் ஹெஷாம் எல்ரஃபேயின் கூற்றுப்படி, “சட்டத்தின் 11 வது பிரிவின் கீழ், தாய்மார்கள் தாங்கள் குழந்தையின் தாய் என்று அறிவித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பின் பிறப்புச் சான்றிதழை வழங்குமாறு சுகாதாரத் துறைக்கு நீதிமன்றம் சில நாட்களில் உத்தரவு பிறப்பிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
புதிய பிறப்புப் பதிவேடு ஒழுங்குமுறைச் சட்டம் அரபு பிராந்திய வரலாற்றில் ஒரு முக்கிய சட்ட வளர்ச்சியாக கருதப்படலாம் என்று அவர் கூறியுள்ளார். தந்தை இல்லை என்றால், தனது குழந்தையைப் பதிவு செய்யும் ஒற்றைத் தாயின் உரிமையை ஒரு அரபு நாடு அங்கீகரிப்பது இதுவே முதல் முறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சட்டங்கள் மக்களை மகிழ்ச்சியடையச் செய்வதற்கும் பொருளாதாரம் மற்றும் தனிநபரின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் வெளியிடப்படுகின்றன” என அவர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
thanks for website-khaleejtamil.