ஒரு வாரத்திற்குள் உருளைக்கிழங்கு, மரக்கறி மற்றும் தேயிலை பயிர்ச்செய்கைக்கு இரண்டு வகையான விசேட உரங்களை உற்பத்தி செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, பணிப்புரை விடுத்துள்ளார். வத்தளையில் அமைந்துள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான சிலோன் உர நிறுவனம் மற்றும் தனியார் உர நிறுவனங்களின் களஞ்சியசாலை வளாகங்களை ஆய்வு செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த பணிப்புரைக்கமைய ஏற்று செயல்படுமாறு அரச மற்றும் தனியார் உர நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி, உருளைக்கிழங்கு மற்றும் மரக்கறி பயிர்ச்செய்கைக்கான பிரத்தியேக உர உற்பத்தி அரச உர நிறுவனத்திடமும், தேயிலை பயிர்ச்செய்கைக்கான விசேட உர உற்பத்தி தனியார் உர நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்பட்டது.
இந்த இரண்டு வகையான உரங்களை உற்பத்தி செய்வதற்கு தேவையான அனுமதியை வழங்குமாறு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்கவிடம் அமைச்சர் பணிப்புரை விடுத்தார். அந்த உரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான யூரியா, எம்ஓபி மற்றும் இதர பொருட்கள் ஏற்கனவே நிறுவனங்களிடம் இருப்பதாக குறித்த நிறுவன தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.