பாறுக் ஷிஹான்
சாய்ந்தமருது சபை உருவாக்கத்திற்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி எந்தத்தடையுமில்லை. இந்த விடயத்தில் கல்முனை மாநகர சபை மக்கள் ஒரு சிலரை விட எல்லோரும் தெளிவாக இருக்கின்றார்கள் என கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான ஏ.எல். அன்ஸார் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட சமகால அரசியல் மற்றும் உள்ளூராட்சித்தேர்தல் -2023 தொடர்பில் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,
ஐக்கிய காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம் இருக்கின்றது. என்னைப்போன்று தான் இக்கட்சியின் கொள்கையும் இருக்கின்றது. சாய்ந்தமருது சபை உருவாக்கத்திற்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி எந்தத்தடையுமில்லை. இந்த விடயத்தில் கல்முனை மாநகர சபை மக்கள் ஒரு சிலரை விட எல்லோரும் தெளிவாக இருக்கின்றார்கள்.
எல்லைப்பிரச்சினைகள் தீர்க்கப்பட் வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். சாய்ந்தமருது மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறான விடயங்கள் தீர்க்கப்படுகின்ற போது கல்முனை மாநகரில் பெரும்பான்மையாகவுள்ள முஸ்லீம் மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.
அத்துடன், தமிழ், முஸ்லீம் கட்சித்தலைமைகள் இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வர வேண்டும். நாங்கள் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அதிகார வர்க்கத்திடம் கெஞ்சியாவது மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்போம் என்றார்.
அத்துடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து வெளியேறி ஐக்கிய காங்கிரஸில் இணைவதற்கு காரணம் திறமைக்கு இடம்கொடுக்கவில்லை என்பதே ஆகும். கட்சித்தலைவர் என்பவர் திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கி, மதிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும், அம்பாறை மாவட்டத்தில் பொருளாதார ரீதியான அபிவிருத்தி முன்னெடுப்துடன், பாரிய உரிமை, இருப்பு சார்ந்த விடயங்களையும் இளைஞர்களின் வேலைவாய்ப்பினையும் முன்னெடுக்கவுள்ளோம்.
எம்மதமும் சம்மதம் என்ற நிலையில் எமது வேலைத்திட்டங்கள் அமையுமென நம்பிக்கை வெளியிட்டார்.
குறித்த விசேட செய்தியாளர் சந்திப்பில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் முன்னிலையில், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தருமான ஏ.எல். அன்ஸார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அஹமட் புர்க்கான் ஆகியோர் உத்தியோகபூர்வமாக ஐக்கிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டனர்.